அய்யய்யோ! அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை ரைடு! மனு அளிக்க வந்தவர் சிறைபிடிக்கப்பட்ட பரிதாபம்!

அய்யய்யோ! அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை ரைடு! மனு அளிக்க வந்தவர் சிறைபிடிக்கப்பட்ட பரிதாபம்!

 ம.பா.கெஜராஜ்,

 வேலூரில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கு, சென்னையில் நடந்த நில அபகரிப்பு வழக்கு ஆகியவற்றிலிருந்து சட்டப்படி விடுதலையான பொன்முடி வீட்டில் தற்போது அமலாக்க துறைரைடு நடத்தி வருகிறது.

 சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதே போல்   விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய சுமார் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

 2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

 விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது.2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை சோதனை நடத்த துவங்கியிருக்கிறார்கள்.

மகன் சிகாமணி,

 வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியில் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ள நிலையில் தற்போதைய அமலாக்கத்துறை சோதனைக்கான சரியான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.

  கடந்த மாதம் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி பரபரப்பு இன்னுமடங்காத நிலையில் பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழகத்தில் ஆளும் திமுக அரசை குறிவைத்து ரெய்டு அஸ்திரங்கள் ஏவப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் பின்னணி குறித்து ஆராய்ந்த டெல்லியை நோக்கி ஆளும் தரப்பு குற்ற அம்புகளை வீசி வருகிறார்கள்.

   எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது, அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 11.20 மணிக்கு பெங்களூரு செல்கிறார். அதே போல் உதயநிதி ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சிளென புறப்பட்டு சென்றுவிட்டார்.

 இந்நிலையில் பொன்முடியை அமலாக்கத்துறை குறி வைத்திருக்கிறது.

 வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் ஒவ்வொரு மாநிலமாக ரெய்டு அஸ்திரங்களை ஏவி ஆட்டம் காணச் செய்து வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

பெட்டிச்செய்தி:-  மன்னார் குடியிலிருந்து ராஜேந்திரன் என்பவர்  மனு ஒன்றை அமைச்சர் பொன் முடியிடம் அளிக்க  காலையில்  வந்திருந்தார். அவர் அமைச்சரின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்துக் கொண்டிருந்த போது அமலாக்கதுறையினர் அங்கு வந்து கேட்டை சாத்தியிருக்கிறார்கள்.

  பதறிப்போன ராஜேந்திரன், நான் மனு அளிக்க வந்தேன் என்னை வெளியில் அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதிகாரிகள் அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்ததுடன் காலை 10.20 மணி வரை அவருக்கு சிற்றுண்டியோ டீ யோ எதையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டவராம் பாவம்.