பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பாடுபடுகிறதாம்!

க.பாலகுரு,
பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நொடியும் பாடுபடும் அரசாக தற்போதைய தமிழக அரசு திகழ்கிறது என தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா புகழாரம் சூட்டினார்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றத்திலிருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் செந்தில் கலைக்கூடம் சார்பில், பெண்களுக்கான தையல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுய தொழில் முனைவராக மாறுவதற்காக தையல் பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. தையல் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் நித்திய லட்சுமி செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம்
தேவா தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
அப்போது பேசிய திருவாரூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா கூறியதாவது, திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் மேம்பாட்டிற்கு தனி கவனம் எடுத்து தமிழக முதல்வர் பணியாற்றி வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நொடியும் பாடுபடும் அரசாக தற்போதைய தமிழக அரசு திகழ்கிறது என புகழாரம் சூட்டினார்.
மேலும் தமிழக அரசு மகளிர் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவிகளுக்கு செய்துவரும் நலத்திட்டங்களை பற்றி விரிவாக பேசினார். மேலும் பெண்கள் தொழில் முனைவராக மாறி அதில் சிறந்து விளங்க வாழ்த்து கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணை தலைவர் மக்கள் கார்த்தி, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் தேன்மொழி சாமிநாதன் செந்தில், தையல் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் நித்திய லட்சுமி செந்தில், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.