போருக்கு பயந்து இந்தியா வந்த இலங்கை தமிழர்கள் இன்றோ? சோறுக்காக...! கண்கலங்குதுங்க!

போருக்கு பயந்து இந்தியா வந்த இலங்கை தமிழர்கள் இன்றோ? சோறுக்காக...! கண்கலங்குதுங்க!

  ம.பா.கெஜராஜ்,

 கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் பலர் கொல்லப்பட்டதை அறிவோம். அந்தக் காலக்கட்டத்தில் உயிருக்கு பயந்து இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக தமிழகத்தின் ராமேஷ்வரம் கடற்கரையில் வந்து இறங்கினார்கள்.

   இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கையில் உள்ள அந்நாட்டு தமிழர்கள் அங்கு இறுதிகட்ட உள்நாட்டுப்போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். துப்பாக்கி தோட்டாக்களில் சிக்காமல் தப்பி வந்த அவர்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  ஆனால் இன்றோ அந்த நாட்டில் போர் எதுவும் இல்லை அதே போல் சோறும் இல்லை. உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆகவே பட்டியினால் சாவதை தவிர்க்க தமிழ்மக்கள் தமிழகத்தை நோக்கி மிதந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

  அந்த வகையில், ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தனுஷ்கோடி வந்தனர். அப்படி வந்தவர்கள் மீது கடற்படை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  உயிரை பணயம் வைத்து தமிழகத்துக்கு தப்பி வந்துக் கொண்டிருக்கும் அவர்களை வரவேற்பதில் நாட்டின் இறையாண்மை என்கிற கடமை இருந்தாலும், மனிதாபிமானம் என்கிற மனப்பாங்கு ஓங்கிதான் நிற்கிறது.

   இலங்கையில் இருந்து தப்பித்து வரத் தொடங்கியுள்ள அவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களாக கருதுவதா அல்லது அகதியாக பதிவு செய்வதா என்ற குழப்பத்தில் இந்திய அரசும், தமிழக அரசும் உள்ளன.

   இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள இலங்கை தமிழர்களை எத்தகையவர்களாக கருதலாம் என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறையிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் தருமாறு கோரியுள்ளது.

  இந்நிலையில்,"இந்தியா வந்துள்ள இலங்கை தமிழர்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர். அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறும், தற்போது வந்துள்ள இலங்கை தமிழர்களை எப்படி கருதலாம் எனவும் மத்திய அரசு அலுவலர்களிடம் கேட்டிருப்பதாக தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் கூறியிருப்பதோடு, வந்தவர்களை முகாம்களில் தங்க வைத்துள்ளார்.  

  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாட்டால் இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என தகவல் ஏற்கனவே வெளியானது.

 ஆகவே சர்வதேச கடல் எல்லை மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

 இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த ஆறு பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடியை அடுத்துள்ள நான்காம் மணல் திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

 மணல் திட்டில் அதிகாலை முதல் குடிநீர் மற்றும் உணவின்றி கைக்குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தவித்து வருவதாக அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

 அதன் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான 'ஹோவர் கிராப்ட்' படகு மூலம் மணல் திட்டில் இருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.

  இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் வவுனியாவை சேர்ந்த ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டனர்.

  அப்போது நடுக்கடலில் படகின் எஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக அதில் இருந்தவர்கள் கடும் வெப்பத்துக்கு மத்தியில் உணவு, தண்ணீரின்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தவித்தனர்.

 பல மணி நேர முயற்சிக்குப் பின் எஞ்சின் சரி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு அவர்கள் வந்தடைந்தனர்.

  பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் 16 இலங்கை தமிழர்கள் மீதும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

  வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்கவும், அவர்களுடன் வந்துள்ள சிறுவர்களை தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

 எனவே இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் செல்ல தயாரான போது, "தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழர்கள் அனைவரையும் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறப்பு உத்தரவு பிறப்பித்தது". இதையடுத்து இலங்கை தமிழர்களை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லாமல் அரசின் உத்தரவு இரவு வரும் என எதிர்பார்க்கப்பட்டதால், இலங்கை தமிழர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

 ஆனால், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இரவு நெடுநேரமாகியும் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதையடுத்து இலங்கை தமிழர்கள் மீண்டும் தனுஷ்கோடி கடற்படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  எனவே தமிழகத்திற்கு வந்த இலங்கை தமிழர்களை சிறையில் அடைப்பதா மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைப்பதா என கடற்படை போலீசாருக்கு குழப்பம் நிலவியது.

   தனுஷ்கோடி வந்துள்ளவர்களில் மன்னாரை சேர்ந்த கியூரி என்பரும் அடக்கம்.  அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,தமிழகம் அழைத்து வர தலா நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் என ஆறு நபர்களுக்கு 60 ஆயிரம் கொடுத்தோம்," என்றார்.

    "எங்களுக்காக திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு ஃபைபர் படகு பேசாலை கடற்கரையில் காத்திருந்தது. அந்த படகில் முகத்தை மூடி இருந்த நபர் ஒருவர் கையசைத்தார். நாங்கள் படகில் ஏறி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வந்து இறங்கினோம்."

   "இறுதிகட்ட போரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு 2001ஆம் ஆண்டு அகதியாக வந்து குடியாத்தம் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியை திருமணம் செய்தேன். பின் இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததால் விமானம் மூலம் தாயகத்துக்குத் திரும்பி வாழ்ந்து வந்தோம்,"

    "எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 மாதங்களாக நான் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறேன். தற்போது இலங்கையில் உள்ள சூழ்நிலையில் எனது இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என்னால் தனியாக வாழ இயலாது. எனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் படகு மூலம் அகதியாக தனுஷ்கோடி வந்தேன்," என்று சொன்னார் கியூரி. இலங்கையில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

   சாமானிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பத்துடன் எனது அக்கா குடும்பத்தையும் சேர்த்து 10 பேர் திங்கள்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம் என்று சொல்லியுள்ளார்.

   இலங்கையில் தற்போது 300 ரூபாய் கொடுத்தாலும் போதிய அரிசி கிடைப்பதில்லை குழந்தைகளுக்கு கலந்து கொடுக்கும் பால் மாவு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடுமையாக உழைத்தால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியும் ஆனால், போதிய வேலைவாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

   இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருவதற்கு தயாராகி வருகின்றனர். பைப்பர் படகிற்கு போதிய மண்ணெண்ணை கிடைக்காததாலும், மண்ணெண்ணெய் விலை உயர்வால் வாங்க இயலாததாலும் இலங்கையில் தங்கி உள்ளனர்.

  இலங்கையில் ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிட 2500 ரூபாய் தேவைப்படுகிறது.

  இந்நிலையில் இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இன்னும் பலர் தமிழகம் வர தயாராக இருப்பதாக இலங்கையில் இருந்து வந்துள்ள இலங்கை தமிழர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய கடற்பரப்பில் கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த முடிவு செய்ததுடன், கடற்கரை ஓரங்களில் தமிழக கடலோர காவல் குழும போலீசார், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படைலலுவலர்கள் சொல்கிறார்கள்.

  ஏற்கனவே தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்ட்டிருக்கிறார்கள்.

   அவர்களுக்கே இன்னமும் இந்திய குடியுரிமை வழங்கப்படாமல் உள்ள நிலையில், மீண்டும் பல தமிழர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்தை நோக்கி மிதந்து வந்துக் கொண்டிருப்பது சோகம் தான், அதிலும் உணவு பஞ்சத்தில் வருவது கண்ணிர் வரவழைக்கும் நிகழ்வாகும்.