தமிழ்நாட்டில் பா.ஜ.க எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி!மு.க. ஸ்டாலின் மா.செ.க்கள் கூட்டத்தில் பேச்சு!

தமிழ்நாட்டில் பா.ஜ.க எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி!மு.க. ஸ்டாலின் மா.செ.க்கள் கூட்டத்தில் பேச்சு!

 Ma.ba.Gajaraj,

தமிழ்நாட்டில் பா.ஜ.க எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது. அதனால் அவர்கள் கோபம் அதிகமாகும், நம்மை நோக்கி பாய்வார்கள்" என்று ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியிருக்கிறார்.

  திமுகவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

  இந்நிலையில், இன்று காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மற்றும் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, இளையோர் மத்தியில் கலைஞரை கொண்டு செல்லும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்த இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

  மேலும் இந்தக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான அறிவுறுத்தல்களை கட்சியினருக்கு வழங்கினார்.

 குறிப்பாக "பாஜகவை பொறுத்தவரையில் இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற தேர்தல். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது. அதனால் கோபம் அதிகமாகும், நம்மை நோக்கி பாய்வார்கள்" என்று ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறினார்.