அமைச்சர் துரைமுருகனை அவதூறாக சித்தரித்த அதிமுக வாலிபருக்கு சிறை! இணைய மோதலால் தி.மு.க. வுடன் லடாய்!

கு.அசோக்

  திமுக அதிமுக இடையே காட்பாடியில் இணைய சண்டை நடந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அமைச்சர் துரைமுருகன் அவர்களை குறிப்பிட்டு அவதூறு பரப்பியதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை விடுவிக்க கோரி அதிமுகவினர் காவல்துறையுடன் வாக்குவாதம் செய்ததுடன், திமுகவை சேர்ந்த குடியாத்தம் குமரன் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பியதாக எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்தனர் - இதனால் இணையதளத்தில் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 வேலூர்மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக நீர் வளத்துறை அமைச்சரும் மற்றும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் இவர் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது நான் இறந்தால் என் கல்லறையில் கோபாலபுரம் விசுவாசி உறங்குகிறான் என்று எழுதுங்கள் என பேசினார்.

 இதனை சமூக வளைதலங்களில் பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழிற்நுட்ப பிரிவை சேர்ந்த அருண்குமார் என்பவர் கல்லறை வடிவமைத்து அந்த வாசகங்களை இடம் பெற வைத்து அவதூறாக இணையதளங்களில் வைரலாக செய்தார்.

 இதுகுறித்து காட்பாடி காவல்நிலையத்தில் திமுக காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா என்பவர் புகார் அளித்தார்.

 அதன் அடிப்படையில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இணையதளங்களில் பதிவிட்ட பொள்ளாச்சிக்கு சென்று அதிமுகவைச் சேர்ந்த அருண் குமாரை கைது செய்தனர்.

 இதையறிந்த அதிமுக  வேலூர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர்.கே.அப்பு தலைமையில் காட்பாடி நிலையத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த அருணை விடுவிக்க கோரியும் அவரை எங்களிடம் காட்டுங்கள் என காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் திமுகவை சேர்ந்த குடியாத்தம் பேச்சாளர் குமரன் என்பவர் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இணையதளத்தில் அவதூறு பரப்பி காணொளியை வெளியிட்டதாக கூறி அவரை கைது செய்ய கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியாத்தத்திலும் அதிமுகவினர் புகார் அளித்தனர்

 திமுக அதிமுக இருவரும் இணையதளம் மூலம் அவதூறு பரப்பியதாக மாறி மாறி புகார்களை அளித்துகொண்டதால் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 இது குறித்து அ.தி.மு.க. மா.செ தெரிவிக்கையில், காட்பாடி டிஎஸ்பி பழனி திமுக ஒன்றிய செயலாளர் போல் செயல்படுகிறார். திமுகவின் ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் தான் அண்ணன் துரை முருகன் குறித்து அவதூறாக பதிவிட்டார். அதை பலர் பகிர்ந்தனர். அதற்காக எங்கள் கட்சிகாரரை அந்த டிஎஸ்பி கைது செய்து விசுவாசம் காட்டியுள்ளார் என்றார் காட்டமாக.