டெண்டு போட்டு போராடுவோம்லே!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி மலை சாலையில் சாலை விரிவாக்கம் செய்ய கோரி பந்தல் அமைத்து மலைகிராம மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ் புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, சொந்தமான 9 அடி அகல தார் சாலை உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த இடம் பராமரிப்பு பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
9 அடி அகலமே உள்ள இந்த சாலையில், பயணிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் பல வருடங்களாக சாலையை அகலப்படுத்தித் தர வேண்டி கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், புதிய தார்சாலை போடப்பட்டனர்.
இதனால் சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உயர்ந்து, எனவே அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறி, பிப்ரவரி மாதம் 8ம் தேதி, ஏப்ரல் 23, மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் 3 முறை நாயக்கனூர் மற்றும் பீமகுளம் சுற்றுவட்டார பகுதிகளில், வசிக்கின்ற 15 மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்படி ஒவ்வொரு முறை சாலை மறியலில் ஈடுபடும் போதும், அதிகாரிகள் வெகு விரைவில் பணிகளை முடித்து தருவதாக உறுதியளிததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று இரவு அந்த வழியே சென்ற நபர் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவதாகவும் கூறி, இன்று காலை முதலே மலை கிராம மக்கள், சாலையின் நடுவே பந்தல் அமைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஆலங்காயம் - ஜமுனாமரத்தூர் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தற்போது நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் கவிதா, வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர்வாணியம்பாடி டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் மலைகிறாம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் சாலை விரிவாக்க பணி தொடங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.