'தம்பி பீரோவை உடைத்து விடாதே! திருடனுக்கு ரிக்குவஸ்ட் கடிதம் எழுதிய வழக்கறிஞர்!

'தம்பி பீரோவை உடைத்து விடாதே! திருடனுக்கு ரிக்குவஸ்ட் கடிதம் எழுதிய வழக்கறிஞர்!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  திருடனுக்கு  ரிக்குவஸ்ட் கடிதம் எழுதி, பீரோவில் ஒட்டி வைத்து விட்டு ஊருக்கு கிளம்பி சென்றுள்ளார் ஒரு வழக்கறிஞர்.

  செயின்ட் தாமஸ் மவுண்ட் சப்டிவிஷனுக்குட்பட்ட, சேலையூர் காவல் நிலையத்தார் தான் அதற்கு காரணமாம்.

  இது பற்றின விவரம் வருமாறு,

  கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காட்வின் சேட்ராக்,வழக்கறிஞராக பணியாற்றி வருகொறார்.

  அவரது வீட்டில், 2018 அக்டோபரில் 55 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டன. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதும், வழக்கு பதிந்து விசாரித்த சேலையூர் போலீசாருக்கு, திருட்டில் ஈடுபட்டவரின் கைரேகை மற்றும் அவரின் முகம் பதிவாகிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தன.

 இருந்தாலும் கூட திருடனை  பிடிக்கவில்லை.

 இந்நிலையில், காட்வின் சேட்ராக் 2019 நவம்பரில் சொந்த ஊரான நாகர் கோவிலுக்கு புறப்பட்டுச்சென்றார். அப்போது அங்கு திருடன் வந்துள்ளான். ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை என்பதால், அவரது வீட்டில் குடியிருந்த ஜான்பால் என்பவரது வீட்டில், பீரோவை உடைத்து, அரை சவரன் மோதிரம் திருடி தப்பித்தான்.

   இதில் திருடனின் முகம் பதிவாகிய கேமரா காட்சிகளும், கைரேகைகளும் கிடைத்தன. ஆனால், உயர் போலீஸ் அதிகாரிகள் வரை சென்றும், இன்று வரை இரண்டு சம்பவங்களிலும் திருட்டில் ஈடுபட்டவர் பிடிக்கப்படவில்லை.

   மாறாக வேறு ஏதாவது கிடைக்கட்டும், உங்களுக்கு தருகிறோம் என்று சொல்லி காலத்தை கடத்தி வந்த போலிசார், மேலும் இனி வெளியில் சென்றால் போலிசுக்கு தெரிவித்துவிட்டு போங்கள், அது பாதுகாப்பு அளிக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறை வழங்கியுள்ளார்கள்.

 இந்நிலையில் கடந்த 28ம் தேதி, சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு செல்லும் முன் சேலையூர் காவல் நிலையம் சென்று சார் நான் ஊருக்கு புறப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

  அதற்கு அங்கிருந்த போலிசார் என் வீட்டில் நகை பணம் எதுவும் இல்லை என்று ஸ்டேஷனில் எழுதிக் கொடுத்துவிட்டு புறப்படுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

  அதிர்ந்த வழக்கறிஞர், ஊருக்கு புறப்படுவதற்கு முன் அவர் வீட்டு 'தம்பி பீரோவை உடைத்து விடாதே.'எப்படியும் உன்னை போலீசார் பிடிக்கப்போவதில்லை. சேதாரம் செய்துவிடாதே' என, திருடனுக்கு கடிதம் எழுதி, அதை பீரோவில் ஒட்டி சென்றார்.

 இந்த தகவலை அப்படியே சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதன் பின்னர் இந்த விஷயம் வைரலாகி வருகிறது.