தானாக செத்த சிறுத்தை க்காக எளிய விஞ்ஞானி பிடிபட்டார்!

பி.ஆர்.எஸ்.,
சிறுத்தை ஒன்று இயற்கை எய்திய நிலையில், அது செத்ததற்கு எளிய விஞ்ஞானி கண்டுபிடித்த கருவியே காரணம் என்று வனத்துறை அவரை கைது செய்து தங்கள் பராக்கிரமத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சேரங்கல் மலையடி கிராமத்தைச் சேர்ந்த யானை துரைசாமி மகன் மோகன் பாபு. இவரது நிலம் ஆந்திர வனப்பகுதியின் எல்லை ஓரம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் யானைகள் அடிக்கடி வருவதாலும் பெரும் பயிர் சேதங்கள் ஏற்படுவதாலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு யானைகள் வந்தால் ஒலி எழுப்பும் அலாரம் கருவியை தனது நிலத்தில் பொருத்தினார்.
இக்கருவி 12 வோல்ட்டு மின்திறனில் மட்டுமே இயங்கும். ஆகவே இக்கருவியின் மின் கம்பியை யார் தொட்டாலும் சரி, பிடித்தாலும் சரி ஆபத்து ஏற்படாது.
குறிப்பாக, யானை வரும் போது மோகன் பாபு பட்டா நிலத்தில் ஆறடி உயரத்தில் உள்ள அலாரம் கம்பி இணைப்பில் யானை உடம்பு பாகம் பட்டவுடன் அலாரம் கருவி ஒலிக்க துவங்கிவிடும். அதன் மூலம் எந்த பகுதியில் யானை உள்ளது என்பதையும் அறிய முடியும்.
இதனால் இந்த அலாரம் ஒலி கேட்டதும் கிராம மக்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டு யானைகளை விரட்டி வந்தார்கள்.
ஆகவே சுமார் ரூ1500 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் அந்த அலாரம் கருவி கிராம மக்களின் உயிருக்கே பாதுகாப்பாய் இருந்தது.
இது வனத்துறையினருக்கும் நன்கு தெரியும். ஏன்னா? யானைகள் நடமாடத்தின் போது இங்கு வரும் வனத்துறையினர் மோகன் பாபு நிலத்திலேயே தங்குவர்.
அதனைத்தொடர்ந்து, இந்த கருவி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வனச்சரகர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலிந்து யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த கருவி இயங்கும் முறையை பார்த்து சென்றுள்ளார்கள்.
மேலும் வனத்துறையினரும் இதுகுறித்து பாராட்டினர்.
அப்படியிருக்க, மோகன் பாபுவின் தந்தை யானை மிதித்து கொல்லப்பட்ட பின்னர் இந்த கருவி அப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இதே கிராமத்தில் விவசாயி வேணுமூர்த்தி என்பவர் நிலத்தில் சுமார் 4 வயது ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்துக் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்து மூன்று நாட்களுக்கு மேலான சிறுத்தையின் உடல் அதே இடத்தில் கால்நடை மருத்துவத்துறையினரால் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது கூறிய மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) நாகசத்தீஷ்கிடி ஜாலான் சிறுத்தை இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகிறது. சிறுத்தை மின் வேலியில் சிக்கி இறக்கவில்லை.உடலில் காயம் ஏற்பட்டும் இறக்கவில்லை. வயிறு காலியாக உள்ளது எனவே அது விஷப் பொருட்களை உண்டதாலும் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. முழுமையான ஆய்வு அறிக்கை சில தினங்களில் கிடைத்துவிடும் எனவே இப்போது அதைப்பற்றி கூற இயலாது என்று சொன்னார்.
அப்படியிருக்க கடந்த 28ஆம் தேதி மாலை இந்த அலாரத்தை எடுத்து வந்து வனச்சரங்க அலுவலகத்தில் வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் செயல் விளக்கம் அளித்திட வருமாறு மோகன் பாபுவை வனத்துறையினர் அழைத்து வந்தனர்.
தகவல் அறிந்து உள்ளூர் நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது அலுவலகத்தின் வெளியே கேட் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் கொண்டு வரப்பட்ட அலாரம் கருவியை பார்க்கவும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை.எதற்காக அழைத்துவரப்பட்டார் என்ற தகவலும் பத்திரிகையாளர்களுக்கு கூற மறுத்து விட்டனர்.
அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது.
இதுகுறித்து விவசாயி வாசு என்பவர் கூறுகையில் சிறுத்தை ஒன்று இறந்ததற்கான காரணத்தை முழுமையாக விசாரிக்காமல் இந்த பொய் வழக்கை பதிந்துள்ளார்கள். ஏழு ஆண்டுகளாய் கருவியின் செயல்பாடுகளை பாராட்டிய வனத்துறைக்கு உண்மை எதுவென்று தெரியும்.
விவசாயி செந்தில் கூறுகையில் பட்டாசு சத்தத்தை விட இக்கருவியின் சப்தம் குறைவு. சாலையில் ட்ராபிப் போலிசார் பயன் படுத்தும் சைரன் ஒலியைவிட குறைவானது.
யானை, மான் போன்றவை இறக்க நேரிடும் சமயத்தில் அவற்றை வனத்துறையினர் எரிப்பார்கள். அப்போது மட்டும் பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் வனத்துறை இந்த சிறுத்தையை எரித்த போது ஏன் அனுமதிக்கவில்லை.
கிராம மக்கள் வேதனைக்கு விடியல் காணும் வகையில் இக்கருவியை உருவாக்கிய கிராமத்து விஞ்ஞானியின் கரங்களில் வெற்றி கோப்பையை தருவதற்கு பதில் காப்பை மாட்ட துடிக்கும் வனத்துறையினரை என்னவென்று சொல்வதோ?