தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக நிர்வாகி! நடவடிக்கை கோரி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

அ.அரவிந்தன்,
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு மனு செய்திருந்த அதிமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து உதவி தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு அதிமுக சார்பில் சலேத்மேரி என்பவரும், திமுக சார்பில் அலமேலு என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு முன்மொழிவு செய்திருந்த பழனி என்பவரின் மகன் வேலு அவரின் முன்மொழிவு மனுவை திரும்பப் பெறுவதாக மனு அளித்தார்.
இதனை அடுத்து திமுக வேட்பாளர் அலமேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாதேஸ்வரன் அறிவித்தார்.
இதுபற்றி தகவல் தெரிந்த கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் கூட்டமாக சென்று வேட்பாளர் சலேத்மேரி போட்டியில் இருந்து வாபஸ் பெற மனு அளிக்க வில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உதவி தேர்தல் அலுவலர் திட்டமிட்டு அதிமுக வேட்பாளரின் மனுவை வாபஸ் பெற வைத்ததாக கூறி அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் அவரை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் உதவித் தேர்தல் அலுவலர் சாமிதுரை புகார் அளித்தார்.
இந்த மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் தாக்கிய அதிமுக ஒன்றியச் செயலாளரை கைது செய்யவில்லை எனக் கூறி கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் திங்களன்று (செப் 27) அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தினங்களில் கைது செய்யாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட போவதாகவும் இதன் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சமாதானம் செய்யப்பட்டது