செல்ல மாட்டுக்கு கோவில் கட்டும் விவசாயி!

செல்ல மாட்டுக்கு கோவில் கட்டும் விவசாயி!

இ.மைக்கேல்.

 தான் செல்லமாக வளர்த்த மாடு இறந்துவிடவே, அதனுடைய எஜமான் தற்போது அதற்காக கோவில் கட்டிவருகிறார் இது பற்றின விவரம் வருமாறு,

 திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.சோமசுந்தரம். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு 10 மாதம் ஆன ஜல்லிக்கட்டு காளை கன்றுக்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு கருப்பன் என்ற பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.

 18 ஆண்டுகளாக வளர்த்து வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி காளை இறந்தது.

 பின்னர் இறந்துபோன காளையின் உடலை தனது சொந்த தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். பிறகு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10ந்தேதி காளை அடக்கம் செய்த இடத்தில் காளையின், உருவப்படத்தை வைத்து குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகிறார்.      இந்நிலையில் இறந்துபோன காளை மாட்டுக்கு கோவில் கட்டப்பட்ட ஏற்பாடு செய்து வருகிறார். 2023-ம் ஆண்டு நினைவு தினத்திற்குள் கோவில் கட்டுமான பணி கட்டி முடிக்கப்பட்டு விடும் என விவசாயி சோமசுந்தரம் சொல்கிறார்.