குழந்தை திருமணத்தை தடுப்போம்:- ஆட்சியர் துவங்கிவைத்த பேரணி!

குழந்தை திருமணத்தை தடுப்போம்:- ஆட்சியர் துவங்கிவைத்த பேரணி!

க.பாலகுரு,

 தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 திருவாரூர் மாவட்ட புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலன் காக்கவும் அவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24ம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த வகையில் பொது மக்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கள்.

   இப்பேரணியில், திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, ராபியம்மாள் அகமது மொய்தீன் கலைக்கல்லூரி, பாரத் கல்வியியல் கல்லூரி, வேலுடையார் கல்வியியல் கல்லூரி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலைக்கல்லூரி மாணவிகள் என 500க்கும் மேற்பட்ட மாணவிகள்  கலந்து கொண்டனர். இப்பேரணியில் குழந்தை திருமணத்தை தடுப்போம், பெண் சிசுக்கொலையை தடுப்போம், பெண்மையை போற்றுவோம், பெண்களின் உணர்வுகளை மதிப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர். 

   இப்பேரணியானது, திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம், பனகல் ரோடு, தெற்கு வீதி வழியாக வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. 

   முன்னதாக, இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளுக்கு நினைவு பரிசினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

  இப்பேரணியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், திருவாரூர் நகர் மன்ற தலைவர்  புவனப்பிரியாசெந்தில் நகர் மன்ற துணை தலைவர்அகிலா, நகராட்சி ஆணையர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வேதநாயகி, முதன்மை கல்வி அலுவலர் விஜயா, நன்னடத்தை அலுவலர் திரு.புஷ்பராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மத்திய பல்கலைக்கழக பதிவாளர் சுலோச்சனா சேகர் இணை இயக்குநர் நலப்பணிகள் செல்வகுமார், சைல்டு லைன் இயக்குநர் ஜீவானந்தம், காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா மற்றும் இரயில்வே நிலைய மேலாளர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.