திருவண்ணாமலை தீபம் கொடியேற்றம்! வேலூரிலுந்து திருக்குடைகள் அனுப்பிவைப்பு!!

திருவண்ணாமலை தீபம் கொடியேற்றம்! வேலூரிலுந்து திருக்குடைகள் அனுப்பிவைப்பு!!

கு.அசோக்,

 திருவண்ணாமலையில், இந்தாண்டு தீபத்திருவிழா இன்று காலை  கோவில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அண்ணாமலையார் சன்னதி அருகே 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் வேதாகம மந்திரங்கள் முழங்க  விருச்சிக லக்கினத்தில் காலை 06.45 மணி அளவில் கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை  தீபத் திருவிழா இன்று  தொடங்கியது.

 கொட்டும் மழையிலும்பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என விண்ணதிர அளவிற்கு கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

 கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, கொடியேற்று விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

  இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி விழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டு கோவிலின் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது.

 இதில், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் அடையாள அட்டை பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

  வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

  இந்நிலையில் இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது.

  அப்படியிருக்க வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார்  ஐந்து சாமி திருக்குடைகள் இன்று ஊர்வலமாக புறப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் மகாதேவமலை மகானந்த சித்தர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், பிரத்யங்கரா தாசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

  அப்போது பக்தர்கள் சிவதாண்டவம் ஆடி மேளதாளங்கள் முழங்க இந்த திருக்குடை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து கிளம்பியது. இன்று மாலை இந்த திருக்குடைகள் தீப திருவிழாவுக்காக அண்ணாமலையார் ஆலயத்தில் ஒப்படைக்கப்படும்.