திராவிட மாடல் அரசுக்கு பாதிரியார்களே காரணம்!

திராவிட மாடல் அரசுக்கு பாதிரியார்களே காரணம்!

 சபரி.ஈஸ்வரன்,

  திராவிட மாடல் என சொல்லுகின்ற இந்த அரசுக்கு முழு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும், பாதிரியர்களும் தான் என சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.    

தூய பவுல் குருத்துவ கல்லூரியின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

 அதில் அப்பாவு பேசியிருப்பதாவது, பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டங்களால், அனைவருக்கும் கல்வி கிடைத்தது. தமிழுக்கு தொண்டாற்றிய கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றவர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை.

  திருச்சபைகள், ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றன. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அனைத்து மதத்தினவரும் கல்வி கற்று, உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

தமிழகம் கல்வியில் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள். உங்கள் உழைப்பு தான். அருட் தந்தையர்கள் அருட்சகோதரிகள், சகோதரர்கள், அவர்கள் இல்லையென்றால், நீங்கள் திரும்பி பார்த்தால், பீஹார் போல் தமிழகமும் இருந்திருக்கும்.

   இதையெல்லாம் தாண்டி உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னை உருவாக்கி இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க தந்தையர்கள், கத்தோலிக்க சகோதரிகள். இந்த அரசும் நான் அடிக்கடி சொல்வேன், இந்த அரசு உங்கள் அரசு உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் பட்டினியாக இருந்து உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் ஆண்டவரிடம் வேண்டி விரும்பி கொண்டு வரப்பட்ட அரசு. இந்த அரசு உங்களுக்கான அரசு.

   இந்த சமூக நீதி திராவிட மாடல் என்று சொல்லுகின்ற இந்த அரசுக்கு, முழு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தான், கிறிஸ்தவ பாதிரியர்கள் தான்.அனைத்து ஆயர்களிடமும் நான் பல முறை சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே முடிவெடுத்து உங்கள் பிரச்னைகள் என்ன என்பதை எண்ணி ஆராய்ந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக மறுக்க மாட்டார். மறுதலிக்க மாட்டார். காரணம், உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். உங்கள் அரசு உங்கள் முதல்வர். நீங்கள் சென்று தைரியமாக உங்களது கோரிக்கைகளை வைத்து காலம் தாழ்த்தாமல் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன். தம்பி இனிகோ இருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார்.

   தமிழக வளர்ச்சியில் உங்களை நீக்கிவிட்டால், வளர்ச்சி ஒன்றுமே இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதர்கள் என்று சொன்னாலும், சமூக நீதியில் திராவிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அது உங்கள் உழைப்பு தான். நீங்கள் தான் அஸ்திவார கற்கள். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இந்த தமிழகம், இன்றைய தமிழகம். இவ்வாறு அப்பாவு பேசினார்.

   சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சில தகவல்கள் உலா வருகின்றன.