அறக்கட்டளையின் கையில் "அம்மா உணவகம்! மறு அவதாரமா?

ம.பா.கெஜராஜ்,
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஏழை மக்களை நினைவில் கொண்டு துவங்கப்பட்டது தான் அம்மா உணவகம். ஓட்டல்களில் ஒரு இட்லி 5 ரூபாய் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், அம்மா உனவகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுக்கப்பட்டது.
19.03.2013 ஆம் தேதி இந்த திட்டம் துவக்கிவைக்கப்பட்டு, தமிழகமெங்கும் படிபடியாக அமைக்கப்பட்டது. இதில் சென்னை முழுவதும் 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்து.. இந்நிலையில் இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.
அப்படியிருக்க கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதா துவக்கிவைத்த அம்மா உணவகங்களை புதிய அரசு மூடிவிடும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
ஆனால் திமுக அரசு அப்படியேதும் செய்துவிடவில்லை. இந்நிலையில் சென்னையிலுள்ள 407 அம்மா உணவகங்களை தனியார் அறக்கட்டளை உதவியுடன் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கு நிதி திரட்ட ஒரு அறக்கட்டளை அமைக்கலாம் என்று அந்த குழு பரிந்துரை அளித்தது. பல்வேறு அமைப்புகளிடம் நிதி பெற்று அம்மா உணவகத்தை நடத்தினால் நஷ்டத்தை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டது. அம்மா உணவக அறக்கட்டளை அமைக்க ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அம்மா உணவக அறக்கட்டளையை தொடங்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், 'அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காத பட்சத்தில் அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக அளிக்குமா? நிதியே கிடைக்காவிட்டால் தொடர்ந்து அம்மா உணவகத்தை செயல்படுத்த அரசு நிதி அளிக்குமா?' என கேள்வி எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நஷ்டம் ஏற்படாமல் அம்மா உணவகத்தை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அறக்கட்டளைக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் பொதுமக்கள் விரும்பி நிதி அளிக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்பது குறித்து அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி, அம்மா உணவகத்தை செயல்படுத்த செலவான நிதி ஆகியவை பற்றி ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் சொன்னார்கள்.