நாங்களே பாலத்தை கட்டிக் கொள்கிறோம்:- ஓட்டுக்கேட்டு வராதீங்க! பொங்கும் மக்கள்!

நாங்களே பாலத்தை கட்டிக் கொள்கிறோம்:- ஓட்டுக்கேட்டு வராதீங்க! பொங்கும் மக்கள்!

 க.பாலகுரு,

 திருவாரூர் தஞ்சாவூர் இரண்டு மாவட்ட நிர்வாகமும் கைவிட்ட கிராம மக்கள், நாங்களே பாலத்தை கட்டிக் கொள்கிறோம் ஓட்டு கேட்டு எங்களிடம் வர வேண்டாம் கிராம மக்கள் ஆவேசம்.

 திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, கீரனூர், ஆதியச்சேரி, பருத்திச்சேரி, செம்பங்குடி, பெரப்படி, சித்தாடி ஆகிய  கிராமங்களில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

 இந்த கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதியாக இருந்தாலும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ளதால், அந்த கிராம மக்கள்  பெரும்பாலும் குடவாசல் பகுதியைத்தான் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

 பள்ளி,கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு  குடவாசல் பகுதிக்கு  செல்ல குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மர பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

  ஆனால், அந்த மரப்பாலம் நீண்ட நாட்களாக பழுதாகி, உடைந்து  மிகவும் மோசமான நிலையில் உள்ளது.      

 தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் வரைஇந்த உடைந்த மரப்பாலம் வழியாக செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

 மேலும் மழை காலங்களிலும், ஆற்றில் தண்ணீர் செல்லும் போதும், இரவு நேரத்திலும் இந்தப் பாலம் வழியாக செல்ல முடியாது.  ஆகவே 5 அல்லது 6 கிலோமீட்டர் சுற்றி தான் குடவாசல் பகுதிக்கு செல்ல வேண்டும்.

 மேலும், அப்பகுதி மக்கள் சொல்லும்போது, 'சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்டி தர வேண்டும், இல்லையெனில் நாங்களே அந்தப் பாலத்தை கட்டிக் கொள்வதாகவும், தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு யாரும் எங்கள் கிராமத்திற்கு வர வேண்டாம்." என்றும் ஆவேசமாக கூறினர்.