திருமணமண்டபத்தில் மின்சார வெடி!மணமகள் மயக்கம்... சாலைமறியலால் பரபரப்பு!

திருமணமண்டபத்தில் மின்சார வெடி!மணமகள் மயக்கம்... சாலைமறியலால் பரபரப்பு!
க.முகில்,
திருமணமண்டபத்தில் மின்சார பெட்டியில் வெடி விபத்து ஏற்பட்டதால், திருமண கோஷ்டிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சென்னை வியாசர்பாடியில், திருமண மண்டபத்தில், மின்கசிவு காரணமாக மின்சாரப் பெட்டி வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு மணி நேரமாக மின் இணைப்பு சரி செய்யவில்லை எனக்கூறி, மணமக்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சர்மா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரப் பெட்டி வெடித்துச் சிதறியதால், மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் மண்டபத்தில் மின் இணைப்பை சரி செய்ய மணமக்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இருந்த போதும், இரண்டு மணி நேரமாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை எனக்கூறி, வியாசர்பாடி-மூலக்கடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மணமகனின் தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதே போல, மணமகளும் மயங்கி விழுந்ததால், இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்தானது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.