டயர் கம்பெனி முன் கூடிய தொழிலாளர்கள்!

கு.அசோக்,
அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மீண்டும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28ம் தேதி அரக்கோணம் - திருத்தணி மாநில நெடுஞ்சாலையில் தொழிற்சாலை முன்பாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மைதானத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
தொழிற்சாலை எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மைதானத்தில் ஒன்று கூடி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தங்க குருநாதன், விஜயலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தொழிற்சாலைக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் மற்றும் சிலர் தொழிற்சாலை முன்பாக கூடினர்.