சசிகலா அதிமுகவை டேக் ஓவர் செய்வாரா?

ம.பா.கெஜராஜ்,
அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம் வகுத்துள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
அவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவது நினைவு கூறத்தக்கதாகும்.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த பின் பேட்டியளித்த சசிகலா, வாக்கு எண்ணிக்கைக்கு பின் தவறு செய்தவர் திருந்துவார் என்று எடப்பாடியை மறைமுகமாக குறிப்பிட்டார். ஏன் அப்படி சொன்னார் என்றால், எடப்பாடி தலையிட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்து விட்டது. இப்போது மக்களவை தேர்தலிலும் அதே கதிதான் ஏற்படும் என்று அவர் அச்சப்படுகிறார். அதன் வெளிபாடு தான் இப்படி பேசியிருக்கிறார் சசிகலா.
மேலும் எடப்பாடியின் தலைமை இம்முறையும் தோல்வியை தழுவினால் இதை வைத்தே அதிமுகவை கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டுள்ளாராம். அதற்கு ஏதுவாக, இப்போதே தனது ஆதரவாளர்கள், தொண்டர்களை திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். ஆதரவாளர்களை திரட்டுவதற்காக சசிகலா அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி, விண்ணப்பம் ஒன்றை அச்சடித்து தனது ஆதரவாளர்களிடம் வழங்கி அதிமுகவினரிடம் கொடுத்து பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த விணப்பத்தில் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம், சட்டமன்ற தொகுதி, கல்வி தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, 1-1-2017 அன்று கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுபவராக இருந்தால், அந்த அமைப்பின் பெயர் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை நிரப்பி சசிகலாவின் முகாம் அலுவலகமான 95, ஜெயலலிதா இல்லம், போயஸ் கார்டன், சென்னை 86 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அனுப்ப முடியாதவர்கள் இத்துடன் இணைத்துள்ள லிங்க்கை பயன்படுத்தி தங்களது விவரங்களை அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளில் சசிகலா தன்னை அதிமுகவின் பொது செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து அதிமுகவில் தனக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு அதிமுகவை கைப்பற்றலாம் என சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.