நிர்வாகிகளிடம் புலம்பினாராமே எடப்பாடி! பலர் தலைமைக்கு விசுவாசமாக இல்லை!தொண்டர்கள் மீது பழி சுமத்த திட்டமா?

நிர்வாகிகளிடம் புலம்பினாராமே எடப்பாடி! பலர் தலைமைக்கு விசுவாசமாக இல்லை!தொண்டர்கள் மீது பழி சுமத்த திட்டமா?

ம.பா.கெஜராஜ்,

 அதிமுக வின் தலைமை அலுவலகத்தில் சென்னை நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் தொண்டர்கள் தலைமைக்கு விசுவாசமாக தேர்தல் பணியாற்றவில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் இருந்த விசுவாசம் இப்போது இல்லாமல் போனதற்கு என்ன காரணம்.

திமுகவினரை பாருங்கள் எப்படி தேர்தல் பணியாற்றினார்கள், நீங்கள் ஏன் அப்படி செய்யக்கூடாது.

  இதை இப்படியே விடக்கூடாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் கட்சி தலைமைக்கு விசுவாசமாக நடந்துக்கொள்ள வேண்டும். யாரெல்லாம் ஒழுங்காக பணியாற்றவில்லை என்கிற பட்டியல் என்னிடம் உள்ளது. அதே போல் தேர்தல் செலவீனங்களுக்காக தலைமையிலிருந்து வழங்கப்பட்ட பணம் கிளைகளுக்கு போய் சேரவில்லை. இடையிலிருந்தவர்கள் அதை சுருட்டிக் கொண்டனர். அவர்கள் யார் என்கிற விவரமும் என்னிடம் உள்ளது. இவ்வாறு அவர் புலம்பியிருக்கிறார்.

  இது சென்னை தொகுதி நிர்வாகிகள் மத்தியில் மட்டும் நடந்த விவகாரமாகும். அடுத்ததாக அனைத்து தொகுதிகளிலும் உள்ள நிர்வாகியை அழைத்து பேசப்போகிறாராம்.

  இது குறித்து ரத்தத்தின் ரத்தமான ஒருவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலை அனுகிய விதமே மிகவும் ரகசியமாகவும், அமுக்கமாகவும் இருந்ததே? அதற்கு அவர் தொண்டர்களிடம் விளக்கம் அளிப்பாரா? புரட்சித்தலைவரும், புரட்சித்தலையியும் சந்தித்த தேர்தல்களில் இப்படியா முடிவெடுப்பார்கள்.

 இவர், யார்கிட்டேயும் விவாதிப்பதில்லை. இவர் உண்டாக்கின கட்சி மாதிரி இஷ்டம் போல் முடிவெடுத்தார். அதன் ரிசல்ட் என்னவாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் பழியை எங்கள் (தொண்டர்கள்) மீது திருப்பிவிடுகிறார்.

  எலெக்ஷனுக்கு முன் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பில் 39 தொகுதிகளில் சில இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது எங்களைப்போன்ற தொண்டர்களுக்கு எவ்வளவு மனவருத்தம் தெரியுங்களா?

  அதே போல் பெருவாரியான தொகுதிகளில் குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருந்தது. தலைமை சரியாக வழிநடத்தியிருந்தால் அடித்து தூள்கிலப்பியிருக்கலாம். வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணமே இல்லாததை போலவே எங்கள் களம் இருந்தது.

  தொண்டர்கள் மன நிலையை அறிய எடப்பாடி பழனிச்சாமி முயல வேண்டும். நிர்வாகிகளை பசை காட்டி இழுப்பது போல தொண்டர்களை வளைக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

  குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும். அதிமுக வைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என்று எடப்பாடி அண்ட் கோ தப்பு கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறது. அது தவறான சிந்தனையாகும். இன்றைய காலகட்டத்தில் மாநிலம் மற்றும் மத்தியில் ஆள்பவர்கள் மீது மக்களுக்கு ஏகப்பட்ட கோபமுள்ளது. அவற்றை துள்ளியமாக பயன்படுத்தி பொதுமக்களின் வாக்குகளை வாக்குபெட்டிக்குள் கொண்டு வந்திருக்க முயன்றிருக்க வேண்டும்.

   நாடே பாஜகவை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதனுடன் கூட்டணி இல்லாத அதிமுக அதைப்பற்றி ஒரு இடத்திலும் விமர்சிக்கவில்லை. அவர்கள் தவறை சுட்டிக்காட்டவேயில்லை. அதேபோல் எடப்பாடி திமுக தலைமையை மட்டும் கடுமையாக விமர்சித்தாரே தவிர, திமுக அரசு  மூன்று ஆண்டுகளில் என்னென்ன குறைபாடுகளை செய்திருக்கிறது என்பதை தெளிவாக சொல்ல தவறிவிட்டார். அப்படி என்றால் நடுநிலையான வாக்காளர்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்.  ஆக அந்த வாக்குகளை அதிமுக பெற முயற்சிக்கவேயில்லை.

  அதே போல் அதிமுக வில் உறுப்பினராக இல்லையென்றாலும் கூட இரட்டை இலைக்குத்தான் எங்கள் வாக்கு என்று சுமார் 5 சதவிகிதம் வாக்குகள் தமிழகத்தில் உள்ளது. என்ன நடந்தாலும் அவர்கள் வாக்கு இரட்டை இலைக்குத்தான். அதையெல்லாம் தலைமை மனதில் கொண்டிருக்க வேண்டும்.

  இதையெல்லாம் விட்டுவிட்டு கட்சி தலைமைக்கு விசுவாசமாக செயல்படவில்லை என்று அவர் புலம்பியதாக கூறப்படுவது பொறுத்தமற்ற குற்றச்சாட்டு ஆகும். அவர் செய்த பிழையிலிருந்து கழற்றிக் கொள்ள தொண்டர்கள் மீது அதை திசை திருப்புகிறார்.

 இந்த சூழலைப் பயன்படுத்திதான் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி எல்லாம் கட்சியை டேக் ஓவர் செய்ய பார்க்கிறார்கள்.

 என்ன இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை....துரோகம் செய்யவில்லை... துரோகம் செய்யவில்லை. என்று அழுத்தி சொன்னார்.

  அதே போல் அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு பின்னர் ஒன்றினைவார்கள் அதிமுக வை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வார்கள் என்று மேலும் சில அதிமுக தொண்டர்கள் நம்பிக்  கொண்டிருக்கிறார்கள்.