பொன்முடிக்கு அமைச்சர் பதவி காலதாமதமாகும்? ஆளுநரின் டெல்லி பயணத்தால் பரபரப்பு!

உ.சசிகுமார்,
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர், ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆளுநர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தநிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகவே பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் தமிழக ஆளுநரின் திடீர் டெல்லி பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல்ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.
கடந்த ஆண்டு சட்டபேரவையில் ஆளுநரை ஒருமையில் விமர்சனம் செய்த பொன்முடியின் செயலை அவர் நினையில் வைத்திருக்கக்கூடும்.