அதிமுகவுக்கு டாட்டா காட்டிய பாமக! கொக்கி போட்டு தூக்கிய பாஜக!

ம.பா.கெஜராஜ்,
தமிழகத்திலுள்ள பலமிக்க.... கொஞ்சம் பலமுள்ள... கட்சிகளை பாஜக தம்பக்கம் இழுத்த பின்னரே நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவரும் என்று கருதப்படுகிறது.
அந்த வகையில் அங்கங்கு கொஞ்சம் உறுப்பினர்களை வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் கரைந்துவிட்டது. அவர்களை போலவே மேலும் சில சொற்ப தொண்டர்களை வைத்துக்கொண்டிருக்கும் கட்சிகளையும், கரைக்க பாஜக பேசிவருகிறது.
இது ஒரு பாணி, அதே போல் வடமாவட்டங்களில் சற்றே பலமாக உள்ள சில பல கட்சிகளை கூட்டணி வைக்க பாஜக முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.
இந்த காட்சிகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதிமுக, தங்கள் அணியில் தேமுதிக சேரும், பாமக சேரும் என்று கடையை விரித்து வைத்துக்கொண்டு "ஈ" ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு இறுதி முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன. ஆனால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லி சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம் மன்சூர் அலிகான் போன்ற லெட்டர் பேடு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியை பொறுத்தவரை எந்தவித சிக்கலும் இல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து விட்டு அடுத்தகட்ட வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டனர்.
ஆகவே தமிழகத்தில் பெரிய கட்சியாக உள்ள அதிமுகவின் நிலை இந்த தேர்தலில் பரிதாபமாக உள்ளது.
ஆனால், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜக வுடன் ரகசிய பேச்சு நடத்துவதாக தெரிகிறது.
ஆனாலும் தேமுதிக வைத்த கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்துவிட்டதாகவும், அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால் மீண்டும் அவர்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த கூடாரத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர்.
தேமுதிகவை 3வது கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிமுக நேற்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனாலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அதிமுக தலைமையிடம் சில கோரிக்கைகள் முன் வைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டும், 5 நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களை குறிப்பிட்டு கேட்டுள்ளார்.
தேமுதிக தற்போது வைத்துள்ள கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க அதிமுக தலைமையும் முன்வந்துள்ள சூழலில் இன்று தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அதன்படி, தேமுதிக நிர்வாகிகள் இன்று அல்லது நாளை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று பேச்சுவார்த்தையை நடத்துவார்களாம்.
அதேநேரத்தில் பாமகவுக்கு 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முன் வந்தது. அதை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அன்புமணியை அழைத்த பாஜக மேலிடம், நீங்கள் பாஜவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும். உங்களுக்கு ஒன்றிய அமைச்சர், ஒரு மாநிலங்களவை, 10 மக்களவை சீட் தருகிறோம் என்று கொக்கி போட்டதாம்.
இந்நிலையில், தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக நிறுத்திக் கொண்டு, பாஜக மேலிடத்துடன் டீல் பேசியிருக்கிறது.
ஆகவே இன்னும் ஓரிரு நாளில் பாஜக முக்கியஸ்தர்கள் முறைப்படி பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து கூட்டணியை பற்றி அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
இது நடந்தவுடன் தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவரும்.