சந்திரபாபு நாயுடுவின் பிளான் ஒர்க்கவுட் ஆகுமா?

சந்திரபாபு நாயுடுவின் பிளான் ஒர்க்கவுட் ஆகுமா?

  வி.டி.வித்யாசாகர், 

 ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு  தேசிய ஜனநாயக கூட்டணியில் (எ.டி.ஏ) இடம் பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது.

 எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி பக்கம் சாய விரும்பாத சூழலில் சந்திரபாபு நாயுடு இதைத்தான் விரும்புவதாக கூறுகிறார்கள்.

 2024 மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி கொண்டிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருகை பார்த்துவிட தேசிய ஜனநாயக கூட்டணி வியூகங்கள் பெரிதாக வகுக்கப்படவில்லை.

 ஆனால், பாரதிய ராஷ்டீரிய சமிதியின் சந்திரசேகர் ராவ் யாருடனும் கைகோர்க்க மாட்டேன் எனக் கூறி தனி தவில் வாசிக்க துவங்கியிருக்கிறார்.

    இந்த சூழலில்தான் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு சீக்ரெட்டாக ஒரு பிளானில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இவர் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வர விரும்புவதாக அரசியல் பார்வையாளர்கள் மட்டுமின்றி, தெலுங்கு தேசம் கட்சிக்குள் இருந்தும் அரசல் புரசலாக பேச்சு எழுந்துள்ளது.

  இருப்பினும், இது நம்பும்படியாக இல்லை என்பதற்கு ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை சான்றாக பார்க்க முடிகிறது.     

  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி அரசுக்கு எதிரான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றும் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. மணிப்பூர் விஷயத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கப்சிப் மூடில் இருந்ததாக தெரிகிறது. இதன்மூலம் ஆந்திராவில் இருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய முடிகிறது.

 ஆக சந்திரபாபு நாயுடுவின் பிளான் சக்சஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.