ஏக்நாத் ஷிண்டே - ராஜ்தாக்கரே திடீர் சந்திப்பு! மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு!

ரவி.ஜார்ஜ்,
மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவின் முன்னாள் நிர்வாகி ராஜ் தாக்கரே மற்றும் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு முக்கிய பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கட்சி இரண்டு அணிகாளாக பிரிந்தது.
உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என 2 டீம் ஏற்பட்டது.
அதில் ஷிண்டே அணி, பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
அதுமட்டுமில்லாமல் இதே கூட்டணியில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவையும் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்வதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே, முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்கள் ராஜ் தாக்கரேயை சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தாதரில் உள்ள ராஜ் தாக்கரேவின் வீட்டுக்கு சென்றார். விநாயகர் சதுர்த்தியையொட்டி ராஜ்தாக்கரே வீட்டுக்கு முதல்வர் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராஜ்தாக்கரேயும் சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் ஆவார். சிவசேனாவில் இருந்து வெளியேறிய 2 தலைவர்கள் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி தாதரில் உள்ள சிவசேனா மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மனோகர் ஜோஷி வீட்டுக்கும் ஏக்நாத் ஷிண்டே சென்று அவரை சந்தித்தார்.
இந்த சந்திப்புகள் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.