புதுச்சேரியில் ஆட்சி நடத்துவது ரங்கசாமிதானா?

ம.பா.கெஜராஜ்,
புதுச்சேரியில் ஆட்சி நடத்துவது ரங்கசாமிதானா? என்கிற கேள்வியை மக்களும் அரசியல் நோக்கர்களும் எழுப்பும்படியாகிவிட்டது.
புதுச்சேரி முதல்வரான என்.ரங்கசாமி தமது கூட்டணியில் பிரதான பங்களிப்பாளர்களாக உள்ள பா.ஜ.க.வினர் மீது அதிருப்தியில் உள்ளார். எல்லாவற்றையும் மத்திய அரசிடம் கேட்கும் நிலை இருப்பதாகப் ஏற்கனவே அவர் சொல்லியிருப்பதை தற்போது நினைவு கூறும்படியாகியிருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி தான் ஆனால் அதிகாரம் டெல்லியில் என்றே சொல்லப்படுகிறது.
இதுபற்றின விவரம் வருமாறு,
புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இது ஒன்றும் அம்மாநில அரசுக்கு புதியதில்லைதான். ஏன்னா ஏற்கனவே நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலேயே பெரிய அளவில் ஆளுநருடன் மோதல் இருந்தது. துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி தமக்கே அதிகாரம் இருப்பதாக கூறி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். இது யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இதே கதைதான் என்.ஆர்.காங்கிரஸ்க்கு ஏற்பட்டிருக்கிறது.
கிரன்பேடிக்கு அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் துணை நிலை ஆளுநர் ஆனார்.
ரங்கசாமி இதற்கு முன்பு மூன்று முறை ஆட்சியில் இருந்துள்ளார். அந்த ஆட்சிகளில் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பால் வழங்குவது, இலவச சைக்கிள் வழங்குவது, பண்டிகை காலங்களில் மலிவு விலையில் மளிகை சாமான்கள் கிடைக்கச் செய்வது போன்ற பல ஜனரஞ்சக திட்டங்களை செயல்படுத்தினார்.
யார் வேண்டுமானாலும் எளிதில் அணுக முடிகிற, அடிக்கடி மக்களிடம் செல்லக்கூடிய முதல்வராக அவர் இருந்தார். அப்படி சந்திக்கும்போது மக்கள் வைக்கும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பெருமளவில் நிறைவேற்றினார்.
இத்தகைய நடவடிக்கைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் காணப்படவில்லை. 2008ல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்சனை காரணமாக முதல்வர் பதவியிலிருந்து ரங்கசாமியை காங்கிரஸ் தலைமை கீழே இறக்கியது. அப்போது பொதுமக்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அந்த அளவுக்கு ரங்கசாமி அப்போது மக்கள் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
அதையடுத்து 2011 பிப்ரவரியில் கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார்.
அப்போது ஆளுநருக்கு அதிகாரம் இருந்தபோதிலும், அவர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்நிலையில் என்.ஆர். ஆட்சிக்கே உரிய வழக்கமான அடையாளங்களும் இந்த ஆட்சியில் காணப்படவில்லை.தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் முதல்வராக ரங்கசாமி இருந்தாலும், நேரடி பாஜக ஆட்சி இல்லை என்பதால் மத்திய அரசும் சில நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.
அனைத்தையும் மத்திய அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய நிலை இருப்பதாகவும், இந்நிலை மாறவேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமியே தற்போது பேசினார். அதுவும், மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷன் ரெட்டி, துணை நிலை ஆளுநர் தமிழிசை முன்னிலையில் நடந்த அரசு விழாவில் இது நடந்தது.
"நம்மால் செய்ய முடிந்ததை நாம் செய்யவேண்டும். அதில் எதை விரைவாகச் செய்ய முடியுமோ அதைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் கேட்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும்," என்றார் முதல்வர்.
"புதுச்சேரி ஒரு அழகான நகரம், சின்ன நகரம். புதுச்சேரியின் வீதிகள் எல்லாம் எப்போதும் அழகானவை என்று சொல்லுவோம். ஆனால் வீதிகளை மேம்படுத்தும் பணிகள் தாமதமாக இருப்பதைப் பல ஆண்டுகளாகப் பார்க்கிறோம். நிர்வாகத்தில் சின்ன சின்ன தடங்கல்கள், சிக்கல்கள் உள்ளன. அதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நாம் எண்ணியவாறு சுற்றலாவை மேம்படுத்த முடியவில்லை.
புதுச்சேரியில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு உடனே பலன் கிடைக்கும் என்ற நிலை இருந்தால்தான் பெரிய வளர்ச்சியை மீண்டும் பார்க்க முடியும். அனுமதி அளிப்பது விரைவாக இருக்க வேண்டும். ஆனால் அது நிறைய பேருக்கு நடக்கவில்லை என்பதால், புதுச்சேரி வருவதற்கே அச்சப்படுகின்றனர்.
புதுச்சேரியை சிங்கப்பூர் போலக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன். அதை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இதுவரைக்கும் ஏதாவது செய்ய முடிந்ததா? செய்ய முடியவில்லை. நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், விதிமுறைகளே இதற்கு காரணம்.
இவை எல்லாம் மாற வேண்டும். அதிகாரிகள் எல்லாம் அதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக சில நடைமுறைகளைத் தளர்த்தி விரைவாகச் செயல்படுத்த வேண்டும்," என்றும் பேசினார் முதல்வர்.
முதல்வரே மனம் கசந்து நிர்வாகச் சிக்கல் பற்றிக் கூறும் நிலைதான் இருக்கிறது.