சின்ன இந்திரா காந்தியே வருக! பிரியங்காவை வரவேற்கும் வயநாடு!

க.உன்னிகிருஷ்ணன்,
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, அத்தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளதால், அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியின் நட்சத்திர அந்தஸ்த்தில் வைத்து பார்க்கப்படுபவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர் போட்டியிட்ட ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் இமாலய வெற்றியை பெற்றார். இரண்டு தொகுதிகளிலும் எம்.பி.யாக வெற்றி பெற்றதால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகவே அவர் வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்வதால் காலியாகும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்தவுள்ளதாக காங்கிரஸ் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டு தீவிர அரசியலுக்குள் நுழைய இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட வயநாடு வாக்காளர்கள் "சின்ன இந்திரா காந்தியே" வருக என்று குதுகலமாக அவரை வரவேற்க தயாராகிவிட்டனர்.
பிரியங்காவின் இந்த தேர்தல் களம் இந்திய அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.