போப்புக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது! மோடியை மையப்படுத்திய டயலாக்கை நீக்கியது காங்கிரஸ்! மன்னிப்பும் கோரியது!

க.உன்னிகிருஷ்ணன்,
இறுதியாக போப் ஆண்டவருக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்ற டயலாக்கை காங்கிரஸ் கட்சி எழுதியிருந்தது. ஜி7 மாநாட்டில் போப்பும் மோடியும் சந்தித்துக்கொண்டு கட்டி தழுவிய படங்களைப் பார்த்து இப்படி கமென்ட் அடித்திருந்தது.
ஆனால் அதைப் பார்த்த பாஜக அந்த நக்கலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
அந்த வகையில், கேரள மாநில பிரிவின் தலைவர் கே.சுரேந்திரன் எக்ஸ் பதிவில் கூறுகையில்,"பிரதமர் மோடியை ஆண்டவர் இயேசுவோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி குற்றம் இழைத்துள்ளது.
இயேசுவை உயர்வாக கருதும் கிறிஸ்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் இந்த பதிவை ஏற்க மாட்டார்கள். மரியாதைக்குரிய போப் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தையும் கேலி செய்யும் நிலைக்கு வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கும் ஒரு பதிலை அளித்தது காங்கிரஸ். நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், "எந்த மதத்தையும் அவமதிக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் கிடையாது. அப்படியிருக்கையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளாக போற்றும் போப்பை அவமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எந்தவொரு உண்மையான தொண்டரும் எண்ணமாட்டார்.
தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டு இந்தநாட்டின் விசுவாசிகளை அவமதிக்கும் மோடியை கேலி செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த கவலையும் இல்லை.
நரேந்திர மோடியின் வெட்கமற்ற அரசியல் விளையாட்டுகளை கேலி செய்வதை போப்பை அவமதிப்பதாக திரித்து சித்தரிக்கும் சுரேந்திரனும், மோடியின் பரிவாரங்களின் வகுப்புவாத சிந்தனையையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். அதனையும் மீறி இந்த புகைப்பட பதிவு மனதை புண்படுத்துவதாக கருதும் கிறிஸ்தவர்களிடம் நாங்கள் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக காங்கிரஸ் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.