உதயநிதியை அமைச்சராக்க துடிக்கும் அ.தி.மு.க. தலைகள்!.....

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.கவின் முன்னணி தலைவர்கள் பலர், சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.உதயநிதியை அமைச்சராக்க துடிக்கிறார்களோ என்று பேசப்பட்டு வருகிறது. உதயநிதியை தொடர்ந்து அவர்கள் தாக்கி பேசி வருவதே அதற்கு காரணமாம்.
இது பற்றின விவரம் வருமாறு,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக தலைகள் உதயநிதியை குறி வைத்து பேசி வருகிறார்கள்,தற்போது பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.
குறிப்பாக பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக,காங்கிரஸ்,பாஜக,விசிக, உள்ளிட்ட கட்சிகளின் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.
இதில் ஆளும் திமுக தன்னுடைய புஜபலம் பராக்கிரமங்கள் அனைத்தையும் கையில் எடுத்து வீசிவருகிறார்கள்.
இதற்காக எம்.எல்.ஏக்.கள்.மற்றும் அமைச்சர்களை களமிறக்கி எதிரணியினரை தட்டித் தூக்கி வருகிறார்கள்.
"எதிர் முனையில் அ.தி.மு.க. தனிவண்டியாக தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியை சேர்ந்த பலவேட்பாளர்கள், விலை போவதும், நடுங்குவதும், ஆள்காட்டி வேலை செய்வதுமாக இருக்கிறார்கள்". இதுவே தள்ளாடுதலுக்கு காரணம்.
இந்த தண்ணிவண்டி தள்ளாட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க உதயநிதியை குறி வைத்து வசைபாடி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்களின் பிரச்சார மேடைகள் அனைத்திலும் உதயநிதி பெயரை உச்சரிக்க அவர்கள் மறப்பதில்லை.
அப்படியிருக்க நேற்று கூட, கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உதயநிதியை மையப்படுத்தி தாக்கி பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார். எங்களிடம் ரகசியம் இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் சொல்வோம் என்று சொன்னார்,¢. ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதம் ஆக போகிறது. உதயநிதி எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக தான். அவர்களின் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது திமுக நீட் தேர்வை ரத்து செய்ய போவதாக பொய் பிரச்சாரம் செய்து நாடகம் ஆடி வருகின்றனர் என்று உதயநிதியை விமர்சித்தார்.
அதே போல் சேலத்தில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக பொய்யான வாக்குறுதி அளித்தது. நீட் ரத்துக்கு தன்னிடம் ரகசியம் இருப்பதாக சொல்லி வாக்கு சேகரித்த உதயநிதி அதை இப்போது பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாமே?ஏன் செய்யவில்லை? எம் .எல் .ஏ. தேர்தலில் இப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தவர், இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இப்போது அவரை காணவில்லை.
அவரை பார்க்கவே முடியவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை விமர்சனம் செய்தார்.
ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.ஸை போலவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம்,¢ ஆகியோரும் உதயநிதியை வார்த்தைகளால் தாக்கி பேசி வருகின்றனர்.
அ.தி.மு.க.தலைவர்களின் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு உதயநிதியும் ஆக்ஷன் பட பாணியில் சுழன்று சுழன்று பதில் அளித்து வருகிறார்.
நான் ஓடி ஒளிந்து கொண்டேன், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள். அதெல்லாம் பொய். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்குதான் இருக்கிறேன்.
நீட் தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம். இதற்கான மசோதாவை மீண்டும் நிறைவேற்றி உள்ளோம். விரைவில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மேலும்,பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி, குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் உட்பட பல நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
இந்நிலையில் உதயநிதி அஸ்திரம் என்பது அதிமுக வுக்கு வாக்குகளாக மாறுகிறதோ இல்லையோ, திமுக வின் டாப் டென் வரிசையில் உதயநிதியின் பெயர் ஏறிக் கொண்டே போகிறது.
திமுகவை பொருத்தவரையில் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்றெல்லாம் விருப்பப்பட்டு வருகின்றனர்.
ஹோ....அப்படின்னா உதயநிதியை அமைச்சராக்க அ.தி.மு.க.பேசி வருகிறார்கள் போல?