போடி திமுகவுக்கு அல்வா கொடுத்த அதிமுக பெண்!

விக்ரமன்,
போடியில் திமுகவில் இணைந்து நகர்மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிய பின், மாவட்ட மகளிரணி நிர்வாகி மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் போடி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மகளிரணி மாவட்ட நிர்வாகியாகவும், போடி நகர இணை செயலராகவும் இருந்தவர் முனியம்மாள்.
இவர் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 24 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று கவுன்சிலராக பொறுப்பு வகித்தார்.
அப்படியிருக்க இம்முறையும் போடி நகராட்சி 22 ஆவது வார்டில் போட்டியிட சீட் கேட்டார்.
ஆனால் அவருக்கு சீட்டு கிடைக்காததால் திடீரென வியாழன்கிழமை திமுகவில் இணைந்தார்.
அவரை குஷிபடுத்த நினைத்த திமுக முனியம்மாவுக்கு 22 ஆவது வார்டில் போட்டியிட சீட் வழங்கி, கட்சியின் அங்கீகார கடிதம் அவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் திமுக சார்பில் போட்டியிடுவது உறுதியானது.
அதனடிப்படையில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்படியிருக்க சனிக்கிழமை இரவு போடிக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் முனியம்மாள் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஓ. பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
முனியம்மாள் மீண்டும் அதிமுகவில் இணைந்ததால் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.