விடமாட்டோம் தலைமை ஆசிரியரை! மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு!
ஜி.கே.சேகரன்,
பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய கூடாது என பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை மாணவர்கள் ஆர்பாட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அதை ஆசிரியர் ஏற்றுக் கொண்டாலும் மாணவர்கள் ஏற்காமல் அந்த ஆசிரியரின் காலில் விழுந்து அவரை போகவிடாமல் தடுத்தனர்.
எனினும் ஆசிரியர் மாறுதல் ஆனார். ஆனால் சுமார் 100 மாணவர்கள் அந்த பள்ளியில் இருந்து டிசி பெற்றுக் கொண்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
அதே மாதிரி ஒரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்தது. இங்குள்ள சின்ன அல்லாபுரம் பகுதியில் மாநகராட்சி பள்ளி செயல்படுகிறது. இங்கு 400 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் தலைமை ஆசிரியராக இருப்பவர் செந்தில்குமார். இவர் கடந்த 11 ஆண்டுகளாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 80 மாணவர்கள் இருந்த இப்பள்ளியில் 400 -க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்து கல்வி அளித்து வருகிறார்
இப்பள்ளி சிறந்த பள்ளியாகவும் பெயர் எடுத்து வருவதுடன், தரம் உயர்த்தபடவுள்ளது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் செந்தில் குமார் கடந்த சனிக்கிழமை சதுப்பேரி பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் தலைமை ஆசிரியர் சொந்த முயற்சியில் மாணவர்களுக்கு கல்வி அளித்து வந்ததால் இவர் இடமாற்றம் செய்யப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பள்ளியை திறம்பட நடத்தி வரும் தலைமை ஆசிரியரை பணியிடமாறுதல் செய்ய கூடாது, அவரை இங்கேயே பணி செய்ய வேண்டுமென மாணவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிமாறுதல் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பள்ளியையும் அவர் கூடுதலாக அவர் கவணிப்பார் என உத்தரவாதம் அளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர் மேலும் இரண்டு ஆசிரியர்களை பணியமர்த்துவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.