என்ன ஐ.பி.எஸ். நீ! எங்கு என்பெயர் ரவுடி லிஸ்டில் இருக்கு! பொங்கிய செல்வ பெருந்தகை!

டி.கோபாலகிருஷ்ணன்,
என்ன ஐ.பி.எஸ். நீ! எங்கு என்பெயர் ரவுடி லிஸ்டில் இருக்கு "குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் அளித்த பேட்டி: "எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?. காந்தியைக் கொலை செய்தீர்கள். எங்கள் நடத்தையை குற்றம் சொல்கிறீர்கள்.
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவீர்களா!.
எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்துவிட்டு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றி பேசுகிறார். தமிழக பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை 32 பக்க உளவுத் துறை அறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்தக் கட்சியில் சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1977 வழக்குகள் உள்ளன.
என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா?. என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்.
அதன்பின்னர் முன்ஜாமீனில் கூட வெளிவர முடியாது. எனவே, அண்ணாமலை மன்னிப்புக் கேட்கும் வரை விடமாட்டோம். பாஜக மாநிலத் தலைவர் இப்படி அவதூறகப் பேசிய விவகாரத்தை இந்திய அளவில் மக்களிடம் கொண்டு செல்வோம். அண்ணாமலையின் வாழ்க்கை தற்போது காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது."
அண்ணாமலை தனது கட்சிக்காரர்களை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்கிறார் என்று குற்றம்சாட்டிய செல்வப்பெருந்தகை, அண்ணாமலை மீது பட்டியல் இனத்தோர் ஆணையத்தில் புகார் அளிக்க தன்னிடம் கட்சியினர் கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ஆருத்ரா தொடர்பாக நாங்கள் பேசியதும் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது என்றும் தன்னை ரவுடி என கூறுகிறார் என்றும் செல்வப்பெருந்தகை சொன்னார்.
எதற்காக செல்வ பெருந்தகை இப்படி சொன்னார்?
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது, கைது செய்யப்பட்டிருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என செல்வப்பெருந்தகை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பதில் அளித்த அண்ணாமலை, அவரே முன்னாள் ரவுடி தான், அவருக்கு எந்த ரவுடிகள் இதை செய்திருப்பார்கள் என்று தெரிந்திருக்கலாம். அவரது பெயர் ரவுடி லிஸ்டில் இருந்தது, மேலும் முன்னாள் ரவுடி என்பதால் அவருக்கு இப்போது வரை அந்த நெட்வொர்க் தெரிந்திருக்கும், இவர்கள் இல்லை என்றால், வேறு யார் இந்தக் கொலையை செய்தார்கள் என்பதை செல்வப்பெருந்தையிடமே போலீஸார் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அண்ணாமலை பதில் அளித்தார்.
இல்லையெனில் செல்வப்பெருந்தகையே உண்மையான குற்றவாளிகள் யார் என்று சொல்லலாம் என்றும் கூறிய அண்ணாமலை செல்வப்பெருந்தகை என்ன போலீஸ் டிஜிபியாக இருந்தவரா என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் தான் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மேற்படி பதில் அளித்து எச்சரித்திருக்கிறார்.