வாச்சாத்தி வன்முறை! எப்.ஐ.ஆர். பதியாத போதிலும் 215 அரசு ஊழியர்களுக்கு தண்டனை! கலெக்டர் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! மேல்முறையீடு செய்யப்படுமா?

வாச்சாத்தி வன்முறை! எப்.ஐ.ஆர். பதியாத போதிலும் 215 அரசு ஊழியர்களுக்கு தண்டனை! கலெக்டர் எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! மேல்முறையீடு செய்யப்படுமா?
: :

ம.பா.கெஜராஜ், 

படங்கள் உதவி எஸ். முனிசாமி.
செய்தி வாசிப்பவர்  உ. சசிகுமார்

 18 பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வாச்சாத்தி வன்முறை தொடர்பாக இதுவரை தமிழக அரசு எப்.ஐ.ஆர். பதியாத நிலையில் 215 அரசு ஊழியர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 இது பற்றின விவரம் வருமாறு,

நிர்வாணக் கொடுமை

   90 பெண்களுக்கு கொடுமை, அவர்களில் 18 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர், அதில் 13 முதல் 18 வயது பெண்கள் அடங்குவர், கர்பிணி பெண்ணையும் அரசு அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை. 28 குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டனர், 15 ஆண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டனர். இப்படி பழங்குடியின மக்கள் 133 பேர் மீது மிகப்பெரிய மிருகவெறி தாக்குதல் நடத்திய வழக்கில் 269 அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 வீரப்பனை காட்டி ரைடு,

இந்த சம்பவம் 20.06.1992, ஆம் தேதி அப்போதைய தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராத்தில் நிகழ்த்தப்பட்டது.  இந்த வாச்சாத்தி கிராமமானது மலையடிவாரத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியாகும்.

 அப்போதெல்லாம் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் பெரிதும் பரபரப்பாக இருந்த காலகட்டம். வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த சிலர் வீரப்பனுடன் வியாபார ரீதியாக தொடர்பு வைத்துள்ளார்கள், அங்குள்ள ஓடையில் சந்தன மரங்களை பதுக்கிவைத்திருக்கிறார்கள் என்று வனத்துறையினர் வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்து செல்வராஜ் என்ற முதியவரை அடித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அவர் மீது பொய் வழக்கு போட முயன்றார்கள். அதன் பேரில் மக்கள் வனத்துறையினரை அங்கிருந்து விரட்டினர்.

 தவறான முடிவெடுத்த முதல்வர் ஜெயலலிதா,

 இந்த தகவல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பார்வைக்கு தவறாக சித்தரிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளை சந்தன கடத்தல்காரர்கள் அடித்து விரட்டினார்கள் என்று பொய்யாக திரித்துவிட்டனர். அதை அப்படியே நம்பிய தமிழக அரசு, உடனடியாக வனத்துறை மற்றும் காவல் துறை என குழு அமைத்து வாச்சாத்தி கிராமத்தை சோதனை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

 அதன் பேரில் வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் 269 அரசு அலுவலர்கள் 20.06.1992 ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். கிராம மக்கள் சுதாரிப்பதற்குள் அடித்து உதைத்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துவந்து ஒரு மரத்தடியில் அமரவைத்தனர். சந்தன கடத்தலுக்கு உதவுவதாக குற்றம் சாட்டி வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 133 பேரைக் கைது செய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், இவர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை 

  இந்த நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். கிராம மக்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். அவர்களின் குடிசைகளும், அரசு வழங்கிய ஓட்டு வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டது. ரேஷன் கடையை உடைத்து உள்ளே புகுந்த வனத்துறையினர் அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து மக்கள் பயன்படுத்தும் நெல்லில் ஊற்றி நெல்லை பயன்படுத்த முடியாதபடிக்கு செய்தனர்.

  ஆடுமாடுகளை வெட்டி கொன்றார்கள், கோழிகளை அறுத்து அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அதன் கழிவுகளை கிராம மக்களின் உணவு தானியங்களில் கலந்தனர். இதையெல்லாம் பழங்குடி மக்கள் ஆணையத்தின் தலைவர் பாமதி ஐ.ஏ.எஸ். அவர்கள் வாச்சாத்திக்கு நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.

  20,21,23 ஆகிய மூன்று தினம் அந்த கிராமத்தை சுற்றிவளைத்து மக்களை வெளியே போகவிடாமல் இரவும் பகலுமாக தாக்கினர். ஊர் பெரியவரை வன அலுவலகத்தில் அம்மணமாக நிற்கவைத்து அதை பெண்களை பார்க்க வைத்ததுடன் துடப்பத்தால் அடிக்கவைத்தனர். பெண்களை நிர்வாணப்படுத்தினர்.

 அம்பலமான கொடுமைகள்

 இந்த சம்பவம் அப்போது வெளியில் தெரியவே பல நாட்கள் ஆகிவிட்டது. பாஷாஜான் என்பவர் கள்ளக்குறிச்சி மலையிலிருந்து வாச்சாத்திக்கு வந்து பார்த்த பின்னர் தான் அம்பலமானது. அவர் சொல்லிய பின்னர் தான் இந்த பிரச்சனை வெளியில் தெரிந்து, தமிழகமே அதிர்ந்தது. அப்போது இந்த விவகாரத்தை வார இதழ்கள் பெரிய அளவில் கவர் செய்தன. குறிப்பாக வேலூர் மற்றும் சென்னையை சேர்ந்த செய்தியாளர்கள் இதில் களப்பணியாற்றினார்கள்.

 புகாரை ஏற்காத உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புகாராக கொண்டு செல்லப்பட்ட போது, இது விசாரிக்கத் தகுந்த வழக்கல்ல என்று அப்போதைய நீதிபதி பத்மினி பெட்டிஷனை தள்ளுபடி செய்தார்.

 ஆகவே எம்.பி.நல்லசிவம் என்பவர் இதை உச்ச நீதிமன்றத்துக்கு கொன்டு சென்றார். உச்சநீதிமன்றம் இந்த பெட்டிஷனை ஏற்று சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் பழங்குடியினர் மீது காவல் துறையில் போட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால் அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனோ நல்லசிவம் வயதானவர் அவர் எப்படி வாச்சாத்தி மலைக்கு செல்லமுடியும் என்று கேள்வியெழுப்பினார். ஆனால் வாச்சாத்தி என்பது மலைகிராம் கிடையாது. மலையடிவார கிராமம் ஆகும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

 தர்மபுரி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு

 இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் 19 ஆண்டுகள் கழித்து 29.09.2011 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் அரசு அதிகாரிகள் 269 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அந்த வகையில் 12 பேருக்கு10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்  மீதி உள்ள குற்றவாளிகளுக்கு 1 முதல் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பு வெளியான போது ஏற்கனவே 54 பேர் இறந்துவிட்டனர்.

மேல்முறையீடு மீதான பரபரப்பு தீர்ப்பு

215 குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 கிரிமினல் பெட்டிஷன்கள் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்த போதே கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி நீதியரசர் வேல்முருகன் அவர்கள் வாச்சாத்தி கிராமத்துக்கு நேரில் சென்று அம்மக்களை விசாரித்ததுடன் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 இந்நிலையில், நீதியரசர் வேல்முருகன் அவர்கள் வாசித்த தீர்ப்பில் ஏற்கனவே தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து 29.09.2023 அன்று உத்தரவிட்டுள்ளார். கூடவே அப்போதை கலெக்டர் எ.தசரதன் மற்றும் காவல் துறை எஸ்.பி. ராமாணுஜம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்கவேண்டும். அவர்களில் யாராவது உயிரோடு இல்லை என்றால், அவர்களது குடும்பத்தினருக்கு அந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். அந்த 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையில், ரூ.5 லட்சத்தை கற்பழிப்பு குற்றவாளிகளிடமிருந்து அரசு வசூலிக்க வேண்டும்இந்த சம்பவத்துக்கு பின் வாச்சாத்தி கிராமத்தில் மறு வாழ்வு மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

 ஒரு குற்றவாளியுடன் ஆறு பேர் அணிவகுப்பு

இந்த வாச்சாத்தி வழக்கில் தர்மபுரி நீதிமன்ற தீர்ப்பும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் ஒரே தேதியில் வெளியாகியிருக்கிறது இதற்கு மொத்தம் 31 ஆண்டுகள் பிடித்தன.

 இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது என வாச்சாத்தி மக்களுக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தன. நெருக்கடியும் இருந்தது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளை அடையாளம் காண 256 பேருக்கும் தலா ஆறு பேர் என்று அணிவகுப்பு செய்யவேண்டும். இது சாதாரண விஷயம் அல்ல. இந்த வழக்கில் பழங்குடியினர் சங்கம் சார்பில் அப்போதைய பொதுச் செயலாளர் சண்முகம் என்பவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டெல்லிபாபு என்பவரும் போராட்டம், ஆர்பாட்டம் மீடியா பப்ளிசிட்டி என இதை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர்.

 இந்த வழக்குக்காகவே தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அரசு சார்பில் தனி கட்டிடம் அமைக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் ஒரே நேரத்தில் அமரக்கூடிய கேலரி போன்ற படிகட்டு இருக்கைகளை அமைத்தனர். அப்போதைய முதன்மை அமர்வு நீதிபதி அசோக்குமார் அவர்களும் இந்த வழக்கை விசாரித்தார்.

 தற்போது இந்த பரபரப்பான தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில தலைவர் பாலகிருஷ்ணன், பழங்குடியினர் மக்கள் மாநில தலைவர் டெல்லிபாபு, து.தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் வாச்சாத்தியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

 இந்நிலையில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தால் அதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று பழங்குடியின சங்கத்தின் தலைவர்கள் சொல்கிறார்கள்.

  தகுந்த ஆதாரங்களுடன் 31 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடியதன் விளைவு குற்றவாளிகள் கூண்டோடு ஜெயிலுக்கு போகிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்ததும் சிறைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.