எடப்பாடிக்கு திகில் கொடுக்கும் வைத்திலிங்க வீட்டு திருமண விழா!

எடப்பாடிக்கு திகில் கொடுக்கும் வைத்திலிங்க வீட்டு திருமண விழா!

 ம.பா.கெஜராஜ்,

எடப்பாடி பழனிச்சாமிக்கு திகில் கொடுக்கும் வகையில், வைத்திலிங்க வீட்டு திருமண விழா அமையக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது.

  ஓ.பன்னீர் செல்வம் அணியின் தளபதியாக பேசப்படும், வைத்திலிங்கத்தின் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் ஜூன் 7ஆம் தேதி தஞ்சாவூரில் திருமணம் நடைபெற உள்ளது.

 இந்த திருமண விழா எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சற்றே திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.

 சசிகலா, ஓ.பி.எஸ். டிடிவி தினகரன் இவர்கள் கரம் கோர்த்துவிடக்கூடாது என்பதே அந்த திகிலுக்கு முக்கிய காரணம்.

 தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக பதம் பார்த்தது. தற்போது சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகிய மூவரும் ஓர் அணியில் நின்றால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பால் கால் ஊன்ற முடியாது என்பதும் இதன் பின்னணியில் உள்ளது.

 இதனால் மூவரும் ஆளுக்கொரு திசையில் இருப்பதே தனது அணிக்கு நல்லது என நினைக்கிறார் எடப்பாடி. ஆனால் வைத்திலிங்கம் எடப்பாடியின் ஆசையில் மண் அள்ளிப்போடப்போவது நிஜம்.

  திருச்சி மாநாட்டிலேயே இணைப்பு தொடர்பாக பேசப்பட்டது. ஆனால் அப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை. அதாவது ஓபிஎஸ் அணி தனிப்பட்ட முறையில் கூட்டிய மாநாடு.

  ஆனால், தற்போது திருமண விழா என்பதால் அனைவரும் ஒன்றாக இணைந்து வர வாய்ப்பு உள்ளது.

   ஜூன் 7-ம் தேதி அமமுக செயற்குழு கூட்டம் இருந்தது. அதையும் தள்ளி வைத்து தஞ்சாவூர் செல்வதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளாராம் தினகரன்.

 ஆக, வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் திருப்பம் ஏற்பட்டு மூவரும் இணைந்தால் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி சில சமரசங்களுக்கு இறங்கி வரலாம்.