உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... நள்ளிரவில் நடந்தது என்ன? தட்டித் தூக்கிய அமித்ஷா! உள்துறை டு கவர்னர் மாளிகை!! விடிய விடிய டிஸ்கஸ்!!!

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... நள்ளிரவில் நடந்தது என்ன? தட்டித் தூக்கிய அமித்ஷா! உள்துறை டு கவர்னர் மாளிகை!! விடிய விடிய டிஸ்கஸ்!!!

ம.பா.கெஜராஜ்,

 அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலிருக்கு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நீலையில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி, கவர்னர் ஆர்.என்.ரவி நேற்றிரவு 7.45 மணிக்கு உத்தரவு பிறப்பித்தார்.

   கவர்னரின் மேற்படி உத்தரவு வந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டிருந்தார். அங்கிருந்த செய்தியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பாக கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக நீக்குவதற்கு கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கவர்னரின் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று சொன்னார்.

 நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றதும் தொலைபேசியில் மூத்த சட்ட நிபுணர்களுடன் கருத்தை கேட்டறிந்தார்.

  அப்போது கவர்னரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

  அப்படியிருக்க நிலையில் நள்ளிரவு 12.45 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து வந்த உத்தரவில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

  மத்திய அரசிடம் இருந்து கவர்னருக்கு வந்த அறிவுரைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

  கவர்னர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை நீக்க முடிவெடுத்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி அவரது பரிந்துரையை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜியை நீக்கியதாக கூறப்படுகிறது.

  இருந்த போதும், செந்தில் பாலாஜியை நீக்கிய பிறகு டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் கருத்து தெரிவிக்கையில் கவர்னருக்கு தன்னிச்சையாக இதில் முடிவெடுக்க அதிகாரம் கிடையாது என்பது தெரியவந்தது. அரசியலமைப்பு சட்டப்படி ஒரு அமைச்சரை நீக்க வேண்டும் என்றால் அதற்கு முதலமைச்சரின் பரிந்துரை அவசியம் என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.

  மேலும், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர இருக்கும் தகவல் கவர்னருக்கு தெரிய வந்தது.

 உடனடியாக  இந்த விஷயம் குறித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவியை மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அதிகாரிகள் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். அதில் என்னென்ன காரணங்களை சுட்டிக்காட்டி இந்த முடிவை எடுத்தீர்கள் என்ற விவரங்களை கேட்டறிந்தனர். முதலமைச்சருக்கு கவர்னர் அனுப்பி இருந்த கடிதத்தின் நகலையும் வாங்கி படித்து பார்த்தனர்.

  அதில் அமலாக்கத்துறையின் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணை நீடித்து வரும் நிலையில், அவர் அமைச்சராக தொடர்வது, நேர்மையான விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

  அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மத்திய மந்திரி அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரும் சட்ட நிபுணர்கள் மூலம் இந்த உத்தரவை படித்து பார்க்க சொன்னார். கவர்னர் உத்தரவு சட்டப்படி சரியா? அல்லது தவறா? என்று அலசி ஆராயப்பட்டது. சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பிறகு கவர்னரின் உத்தரவு ஏற்கத்தக்கதல்ல என்று தெளிவுபடுத்தினார்கள்.

  இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து கவர்னருக்கு சில சட்ட விளக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டது. முதலமைச்சரின் பரிந்துரையின்றி தன்னிச்சையாக அமைச்சரை நீக்க முடியாது என்று எடுத்துக் கூறினார்கள். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுமாறும் அறிவுறுத்தினார்கள். இதன் பிறகே கவர்னர் ஆர்.என்.ரவி தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

   சுமார் 5 மணி நேர சட்ட விளக்கங்களுக்கு பிறகு கவர்னர் தனது உத்தரவை வாபஸ் வாங்கி இருக்கிறார். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எச்சரித்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கவர்னர் ஆர்.என்.ரவி இந்த உத்தரவை வாபஸ் பெற்றதாக மூத்த சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

   இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஆளுநர் மாளிகையை எட்டியது.