ரெயில் விபத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணமாம்! சொல்கிறது பாஜக!

ஜார்ஜ்.ரவி,
ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 288 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பினார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் குளிர்காயும் விதமாக பா.ஜ.க.முக்கியஸ்தர்கள் செயல்பட்டு வருவதாகவே பார்க்கப்படுகிறது.
ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி என மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி. வேறு மாநிலத்தில் விபத்து நடந்திருக்கும்போது, நேற்றிலிருந்து அவர்கள் ஏன் அதிக அளவில் பீதி அடைந்துள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் பயப்படுகிறார்கள்?. போலீஸ் உதவியுடன் ரெயில்வே அதிகாரிகளின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுள்ளனர். இரண்டு அதிகாரிகளின் போன் உரையாடல் இவர்களுக்கு எப்படி தெரிந்தது.
எப்படி உரையாடல் கசிந்தது. இது சிபிஐ விசாரணையில் வரவேண்டும். இது வரவில்லை என்றால், நான் நீதிமன்றம் செல்வேன் என்று மிரட்டியிருக்கிறார்.
ரெயில் விபத்து குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ள நிலையில் ரெயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் இதில் சதி இருப்பதாவும், அதே போல் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் மீது பழி போடுவதையும், அரசியல் குளிர்காய முற்படுவதாகவே நாட்டுமக்கள் நம்புகிறார்கள்.