முன்னாள் பாஜக நிர்வாகியை வெட்டிய இந்நாள் பாஜக நிர்வாகி!
க.பாலகுரு,
பாஜக முன்னாள் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதலுக்கு காரணமாக இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் நாகப்பட்டினம் சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவு .
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் பாஜக மாவட்ட விவசாய தலைவர் பொறுப்பில் இருந்தவர். இவரை குடவாசல் அகரஓகை என்ற பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி சாய்ந்துவிட்டு தப்பித்துவிட்டனர்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மதுசூதனன் மனைவி ஹரிணி, பாஜக மாவட்ட நிர்வாகிகள் தனது கணவனை தாக்கியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவழக்கு பதிந்த போலிசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
அதில் கடந்த சில நாட்களாக மதுசூதனன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் மீது குற்றச்சாட்டுகளை கூறி பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
¢ இதனிடையே நேற்று நள்ளிரவு கொலைவெறி தாக்குதலுக்கு காரணமாக இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டு நீடாமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி சீதாலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் 13 நாட்கள் நாகப்பட்டினம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னால் நிர்வாகியை பாஜகவைச் சேர்ந்தவர் கொலை செய்ய முயற்சித்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.,