கிடு கிடு கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட டீம்! மீட்கப்பட்டவர் பலி!

கிடு கிடு கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்க அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட டீம்! மீட்கப்பட்டவர் பலி!

  கு.அசோக்,

அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் நெல்லை கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்பதற்காக விரைந்து சென்று மீட்பு பணியை துவக்கினார்.

இந்த விபத்தில் தற்போது மீட்கப்பட்ட செல்வம் என்பவரும் இறந்துவிட்டார் 

 இராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி மையம் உள்ளது திருநெல்வேலியில் கல்குவாரியில் பணியின் போது பாறை விழுந்து அதற்கு அடியில் தொழிலாளிகள் சிக்கிகொண்டனர் பல்வேறு முயற்சிகளை செய்தும் அவர்களை மீட்க முடியாததால் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் திருநெல்வேலிக்கு சென்றனர்.

  இது பற்றின விவரம் வருமாறு,

  திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. கிடு கிடு பள்ளத்தாக்கு போல உள்ள இங்கு நேற்றிரவு கற்களை ஏற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு கல் அள்ளும் பணி நடந்த பகுதியில் விழுந்தது.

  இதில் இரண்டு லாரிகள், 3 ஹிட்டாச்சி இயந்திர வாகனங்கள் மேலும் ஆழத்துக்குச் சென்றன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் கற்கள் சரிவுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினர்.

 விவரம் அறிந்த நாங்குநேரி பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

 அந்த குவாரி,300 அடிக்கும் ஆழமானது என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

   இந்நிலையில், மீட்புப் படையினர் ஹிட்டாச்சி ஆப்பரேட்டர்கள் முருகன், விஜய் ஆகிய இருவரை உயிருடன் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சம்பவ பகுதியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், கனரக வாகனங்களை இறக்கி இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முயன்றுள்ளது. இந்த நிலையில் திடீரென பாறைச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் 300 அடி ஆழத்துக்குள் இறங்க முயன்ற வீரர்கள் மீண்டும் மேலே வந்துவிட்டனர்.

 அப்படியிருக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் விவேக் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் 30 பேர் கொண்ட வீரர்கள் குழு சாலை மார்க்கமாக நெல்லைக்கு விரைந்துள்ளனர்.

  இந்நிலையில் கல்குவாரி உரிமம் பெற்ற சங்கரலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாகியுள்ள கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

   இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.ஆபிசர் ஒருவர் தெரிவிக்கையில், இது மாதிரி கல் குவாரிகள் தமிழகம் முழுவதிலும் ஏராளமாக உள்ளன. இங்கு கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

  இது குறித்தெல்லாம் அரசு கணக்கெடுக்கும் பணியை நடத்தி முறைப்படுத்த வேண்டும்.

 குறிப்பாக பழைய வடஆற்காடு மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி பெறாத கல்குவாரிகள் ஏராளமாக உள்ளது. மலைமுழுங்கி மகாதேவன்களால் மலைகள் அழிக்கப்பட்டு இவை நடத்தப்பட்டு வருகின்றன, இதையும் அரசு கண்டு கொள்ள வேண்டும் என்கிறார்.

அதே போல் இது போன்ற குவாரிகள் பயன்படுத்தும் வெடி பொருட்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்கிறார் அவர்.