குழந்தை கடத்தல் என "எக்ஸ்" வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் கைது!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டத்தில், குவிரன் என்ற பெயரில் ஐடி கொண்ட ஒரு நபர், அவரது "எக்ஸ்" வலைதள பக்கத்தில், குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை விற்கும் கும்பலில் தொடர்புடைய ஒருவர் மன்னார்குடி ஆசார் தெருவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொய் தகவல் வெளியிட்டார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் இது போன்ற கும்பல் இயங்கி வருவதாகவும், நேற்று (06.03.2024) திருவாரூர் ஒரு சிறுவனை கடத்த முயன்றதாக செய்தியை அவர் பார்த்ததாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் எனவும் பொய் செய்தியை வதந்தியாக பரப்பினார்.
அவரை கண்டுபிடித்திடும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மன்னார்குடி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஏ.அஸ்வந்த் ஆண்ட்டோ ஆரோக்கியராஜ் மற்றும் மன்னார்குடி நகர காவல் நிலைய ஆய்வாளர் கரிகால்சோழன் ஆகியோர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர், குழந்தை கடத்தல் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வதந்தி பரப்பியவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆலிவலம் காவல் நிலைய சரகத்தில் வரலாற்றுதாள் பராமரிக்கப்பட்டு வரும் ரௌடி கலைமகன், வயது 22/2024, த/பெ. கண்ணன், நாட்டு வாய்க்கால் தெரு என தெரியவந்தது.
வழக்கு ஒன்றுக்காக அவர் தன்னிச்சையாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிக்சைக்கு சேர்ந்துள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக மன்னார்குடி அரசு மருத்துவமனை சென்றபோது, அங்கு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கலைமகன், தன்னை காவல்துறையினர் கைது செய்ய வந்துவிட்டார்கள் என தவறாக நினைத்து மன்னார்குடி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அப்போது மருத்துவமனையில் இருந்த யாரோ ஒரு விஷமி அவரது செல்போனில் படம் பிடித்து, குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர், காவல்துறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்வதுபோல் தவறாக சித்தரித்து, குவிரன் என்ற ஐ டி முகவரியில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
¢ அந்த சம்பவம்தான் சமூக வளைதளத்தில் பொதுமக்கள் மத்தியில் வதந்தியாக பரவிவருகிறது என்ற உண்மை நிலவரம் தனிப்படையினரால் உறுதிபடுத்தப்பட்டது.
தொடர் விசாரணையில், மேற்படி சம்பவத்தை, வீடியோ பதிவு செய்து பின்பு போலியாக சித்தரித்து, கற்பனையான ஒரு கருத்தை, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், குவிரன் என்ற முகவரியுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.,
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தை செல்போனில் படம் பிடித்து, அதை தனது நண்பர்கள் மத்தியில் தவறான கருத்துக்களுடன் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை சமூக வளைதளத்தில் பகிர்ந்த குற்றத்திற்காக மன்னார்குடி நகராட்சியில் டிராக்டர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் எதிரி சதீஷ்குமார், வயது 28/2024, த/பெ. குமார், முல்லை நகர், பூக்கொல்லைத்தெரு, மன்னார்குடி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்ற சட்டவிரோத கருத்துக்களை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் பதவிடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.