ரத்தம் கொதிக்குது-நீ நல்லாவே இருக்கமாட்டாய்.... காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை வச்சு செய்த திமுக நகரமன்ற தலைவர்!

க.பாலகுரு,

 மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நகராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியினரே இப்படி செயல்பட்டது பேசு பொருளாகியிருக்கிறது.

  மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டடத்தை ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குமாடியில் கட்ட திட்டமிடப்பட்டு அதன் அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

  நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு டூவீலரில் வந்து இறங்கிய திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான குண்டாமணி செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

எம்.பி., நகராட்சி தலைவர், கவுன்சிலர் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எப்படி வேலையை தொடங்கலாம்? இந்த இடத்துக்கு நகராட்சி தீர்மானம் இன்னும் நிறைவேற்றவில்லை. இந்த இடம் இரண்டு சர்வேயில் உள்ளது, இங்கே கட்டடம் கட்டிடுவீங்களா,?எப்படி கட்டுறீங்கன்னு பார்க்கிறேன், வயிற்று எரிச்சலை கொட்டாதே,உன் காரை உள்ளே விடமாட்டேன், ரத்தம் எல்லாம் கொதிக்குது, உன் எண்ணத்தில் இடி விழ,  தலைவர் கொடுத்த திட்டம் தானே இது அப்பறம் எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா? திமுக காரன் அடிச்சுக்கணும்  அதை டிவில எல்லாம் போடணும் நீ வேடிக்கை பார்க்கணுமா என  துள்ளி குதித்தார். 

  இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்எல்ஏ ராஜகுமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், எம்எல்ஏவிடம் நீ எப்படி இங்க வந்த, நீ காங்கிரஸ் ஓட்டுலயா ஜெயிச்ச... திமுக ஓட்ட வாங்கி தானே ஜெயிச்ச.. மாயவரத்துல உனக்கு ஓட்டுகேட்க ஒருத்தன் வரலை. நாங்கதானே வந்தோம். எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.