அக்கா அமைச்சர்! தம்பி மேயர்!! ஈகோவோ ஈகோ! பாவம் அதிகாரிகள்!

அக்கா அமைச்சர்! தம்பி மேயர்!! ஈகோவோ ஈகோ! பாவம் அதிகாரிகள்!

  கே.ஏ.ஜெகதீஷ்வரி!

  தி.மு.க.வைச் சேர்ந்த அக்கா, தம்பி இடையே யார் பெரியவர்கள் என்கிற போட்டி நிலவுகிறது. இதன் நடுவில் சிக்கி மாநகராட்சி அலுவலர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

  தூத்துக்குடி தி.மு.க.வின் சிங்கமாக விளங்கியவர் என்.பெரியசாமி.  மாவட்டம் உருவானதில் இருந்து 30 ஆண்டுகளுக்கு இவர் தான் மாவட்ட செயலாளர். அதுமட்டுமின்றி தூத்துக்குடி நகர்மன்ற தலைவர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர், தொழிற்சங்க தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக கருணாநிதிக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர். முரட்டு பக்தர் என்கிற பெயரும் அவருக்கு உண்டு.

  அப்படியிருக்க அரவரது அரசியல் வாரிசாக மகள் கீதா ஜீவன், மகன் ஜெகன் பெரியசாமி ஆகியோரை பெரியசாமி களம் இறக்கினார்.இதில் தம்பியை ஒப்பிடுகையில் அக்காவின் அரசியலை விட பிந்திதான் என்கிற கணக்கு உண்டு.

  கனிமொழிக்கு நெருக்கமான நபராக விளங்கும் கீதா ஜீவன், இரண்டாவது முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். இவருக்கு சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

  இந்நிலையில், தனக்கு பெரிய அங்கீகாரம் இல்லை என்ற வருத்தம் ஜெகன் பெரியசாமியின் மனதில் இருக்கிறது.

 அப்படியிருக்க, கீதா ஜீவன், ஜெகன் பெரியசாமி இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.

  இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட கடும் போட்டிக்கு மத்தியில் தூத்துக்குடி மேயர் பதவியை ஜெகன் பெரியசாமிக்கு கிடைத்தது.

 அதே நேரத்தில் "அக்கா அமைச்சர், தம்பி மேயரா? ஒரே குடும்பத்திற்கு பதவிகள் வாரி வழங்கப்படுகிறதே!" என்று திமுக உடன்பிறப்புகள் முணகியது வெளிப்படையாவே கேட்டது.

 ஆனால் உள்விவகாரமோ வேறு விதமாக இருக்கிறது. அதாவது மாநகராட்சி அலுர்களுக்கு கீதாஜீவன் ஏதும் பணித்தால், அதற்கு அவரது தம்பியான மேயர் ஜெகன் அதிகாரிகளை கடிந்துக் கொள்கிறாராம்.

   இதனால் பாவம் மாநகராட்சி அலுவலர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்களாம்.