கலெக்டரே என்னிடம் தலை வணங்குகிறா......ஊராட்சி மன்ற தலைவரின் தெனாவட்டு!

ம.பா.கெஜராஜ்,
கலெக்டரே என்னிடம் தலை வணங்குகிறா.... என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று சின்னத்தாமல் செருவு தலைவர் ராஜமாணிக்கம் தெனாவட்டாக பேசியிருக்கிறார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா, சின்னதாமல் செருவு ஊராட்சி பகுதியில் எம்.ஜி.ஆர். நகர் உள்ளது. அங்கு சர்வே எண் 207 ல் ஆம்பூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் வீட்டுமனை பிரிவு அமைத்துள்ளார். ஆனால் அதற்கு இணைப்பு சாலை கிடையாது.
இந்த சூழ்நிலையில், பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் உள்ள அரசு நிலத்தில் (சர்வே எண் : 207/4எ) அத்துமீறி சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கத்துக்கு கையூட்டு கொடுத்ததுடன், அவருடைய துணையோடு அங்கு சிமெண்ட் சாலை அமைத்துள்ளார்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த சாலை பணியை நிறுத்த கோரி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்க்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு விரைந்த வருவாய் துறை அலுவலர்கள் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி அந்த சாலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மனைப்பிரிவு உரிமையாளர் ஜெகதீசனை எச்சரித்தனர்.
ஆனால் அதை சட்டை செய்யாத ஜெகதீசனும், கட்சியினர் சிலரும், வருவாய் துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவர்களை அவதூறாக பேசியிருக்கிறார்கள்.
அந்த ஓதாவில், அங்கு தொடர்ந்து சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதனையடுத்து வருவாய் துறை அலுவலர்கள் மனை பிரிவு உரிமையாளர் ஜெகதீசன் என்பவர் பெயரிலும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருவாய் துறை அலுவலர்களை மிரட்டிய அரசியல் கட்சியின் மாவட்ட தலைவர் பெயரிலும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் அளிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் வழக்கம் போல சொம்படித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு அலுவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது என்று சம்மந்தப்பட்ட சங்கத்தினர் வருத்தப்படுகிறார்கள்.
வேறு வழி தெரியாத அப்பகுதி மக்கள் சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் என்பவரை அணுகி இது சம்பந்தமாக கேள்வி எழுப்பிய போது அவர் அரசு நிலத்தில் சாலை அமைக்க நான் அப்ரூவல் கொடுத்துவிட்டேன்.
உங்....மால நீ யாரடி என்னை கேள்வி கேட்க மாவட்ட ஆட்சித் தலைவரே என்னை பார்த்து வணங்குகிறா.., என்று மிரட்டியதுடன் அவர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளார்.
ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக அரசு நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவரை அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து, அரசு நிலத்தை மீட்க வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.