கூட்டணி முறிந்தது! அ.தி.மு.க.வுக்கும் - பா.ஜ.க.வுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி பஞ்சாயத்து செய்ய போகிறாராம்!

கூட்டணி முறிந்தது! அ.தி.மு.க.வுக்கும் - பா.ஜ.க.வுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி பஞ்சாயத்து செய்ய போகிறாராம்!

 ம.பா.கெஜராஜ்,

தேசிய ஜனநாயாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, பா.ஜ.க.வுடன் இன்றும் கூட்டணி இல்லை, இனி என்றும் கூட்டணி இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி முறிவால் எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சந்திக்க தயார். கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

 ஆகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி உருவாவது உறுதியாகி இருக்கிறது.

 இந்நிலையில் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எந்தப் பாதையில் செல்லும் என்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

 அதிமுக அமைக்கும் புதிய கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும், பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் தொடரும் என்ற கேள்வி தான் தற்போது தமிழக அரசியல் பரபரப்பாக இருந்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 தமாகா தலைவர் ஜிகே வாசன் இது குறித்து பேசும் போது, "வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்று பயணித்து வருகிறோம். இது குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம்" என்று கூறியுள்ளார்.

 புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசும் போது, "இரண்டு கட்சிகளும் விலகி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் இது குறித்து வலியுறுத்துவேன். அவரை தமிழகம் வரவழைத்து இரு தரப்பையும் அழைத்துப் பேசி இணக்கம் வர முயற்சிப்பேன்" என்று கூறியுள்ளார். (காமெடி என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல)

 அதிமுக பக்கம் சென்றால் பாஜகவின் கோப பார்வைக்கு ஆளாக நேரிடுமே என்ற பயமும், பாஜக பக்கம் சென்றால் தேர்தலில் ஓரம்கட்டப்படுவார்கள் என்று நினைக்கிறார்களாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகள்.