அரசு அலுவலரை தற்கொலைக்கு தூண்டுகிறதா எம்.எல்.ஏ. தரப்பு!

ஜி.சாந்தகுமார்,
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் அட்ராசிட்டி தாங்க முடியாமல் அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில், விசாரித்தோம்.
திருப்பத்தூர் மாவட்ட கழகத்தில் முக்கிய பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரையும் அவரது இரண்டு மகன்களையும் மையப்படுத்தி இந்த குற்றச்சாட்டுக்கான கரங்கள் நீள்கின்றன.
இந்த மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் அதிகார எல்லைக்கு கீழ் நான்கு சலவை பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக ஆயத்த பணி துவங்கிய போது, அதை அறிந்து கொண்ட மேற்படி ஆளுங்கட்சியினர் நான் கொடுக்கும் பட்டியலில் உள்ள நபர்களுக்குத்தான் அந்த பணியை கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்ததாக தெரிகிறது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களின்படி செயல்பட முடிவெடுத்த சம்மந்தப்பட்ட இணை அலுவலர்
முதலில் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் நோக்கத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கோப்புகளை அனுப்பியுள்ளார். அதில் பட்டியலினத்தில் அருந்ததியர், எம்.பி.சி, பி.சி மற்றும் பிற பிரிவினருக்கான ஒதுக்கீடுபடி வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒத்து போகவில்லை. ஆகவே நாளிதழ்களில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து 44 விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில் அவர்களில் 34 பேர் இன்டர்வீயுவில் பங்கேற்றனர்.
கமிட்டி அமைத்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேற்படி சட்டமன்ற உறுப்பினர் தரப்பு அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அந்த வேலையை பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அரசு விதித்த தகுதியில்லாததால் பணி வழங்கப்படவில்லை. இதனால் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறையின் இணை அலுவலரை அவர்கள் டார்ச்சர் செய்திருக்கிறார்கள்.
அப்படியிருக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளர் வாணியம்பாடி வந்த போது சுகாதார துறை இணை அதிகாரியை குறித்து புகார் கொடுக்க வைத்துள்ளார்கள். இவைகளின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இணை அலுவலர் தரப்பு நேர்மையான முறையில் செயல்பட்டு தகுதியானவர்களுக்கே அந்த பணிகளை அளித்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.
ஆனால் விடாத அந்த அரசியல்வாதிகள் இணை அலுவலர் மீது தவறான பிரபகண்டாவை மேற்கொண்டுள்ளதுடன் அவரை இந்த மாவட்டத்திலிருந்து மாற்றியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அதைவிடக் கொடுமை கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அந்த அதிகாரி தினம் தினம் அவமானப்படுத்தப்பட்டு வருகிறாராம். இவர்களின் டார்ச்சர் தாங்காமல் சம்மந்தப்பட்ட அலுவலர் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்பட்டதாக சில அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மக்கள் பணிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், கட்சிகாரர்களில் இது போன்ற ஒரு சிலரும், அவரது வாரிசுகளும் அரசாங்க அதிகாரியை நேர்மையாக மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கிறார்கள்
அரசாங்கத்தையும், கட்சியையும் முன்னிறுத்தி வேண்டப்பட்டவர்களுக்கு நலன் கிடைக்க பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். இது குறித்து அரசும், கட்சித்தலைமையும் விசாரித்தால் உண்மை நிலமை அம்பலமாகும் என்று அம்மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்.
தலைமை என்னதான் கடிவாளம் போட்டாலும் கட்சிக்கும் ஆட்சிக்கும் கலங்கம் கற்பிக்க முயலும் இது போன்றவர்களை யார் தான் கண்டிப்பதோ?