சென்னை மாநகராட்சியின் விர்ர்ர்ர்ர்ர்ர்!50 முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வு!

சென்னை மாநகராட்சியின் விர்ர்ர்ர்ர்ர்ர்!50 முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வு!

  ஜி.சாந்தகுமார்,

  சென்னையின் பழைய நகரப்பகுதிகளுக்கு 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரையிலும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலும் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றின விவரம் வருமாறு,

சென்னையில் மாநகராட்சி பகுதியில் 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள்.

 அப்படியிருக்க 600 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும், 601-1,200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 50 முதல் 75 சதவீதம் வரையிலும், 1,201-1,800 சதுரஅடி குடியிருப்புகளுக்கு 75 முதல் 100 சதவீதம் வரையிலும், 1,801 சதுரஅடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100 முதல் 150 சதவீதம் வரையிலும் சொத்துவரி உயர்ந்துள்ளது.

  மேலும், தொழிற்சாலை, வணிக ரீதியிலான கட்டிடங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 75 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு உயர்த்தப்பட்டு உள்ளது என்ற விவரம் வீட்டின் உரிமையாளர்களுக்கு தற்போது தெரிவிக்கப்படுவதோடு,மாநகராட்சி வருவாய் துறை மூலம் உயர்த்தப்பட்ட சொத்துவரி, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

  அந்த வகையில் இதுவரையில் 8 லட்சம் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவிலான குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருந்தாலும் பெரிய அளவில் உள்ள குடியிருப்புகளுக்கு அதிகமாக கூடி இருப்பதால் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 அடிப்படை வசதிகள் கூட இல்லாத தெருக்களில் சொத்துவரி அதிகளவு உயர்த்தப்பட்டு இருப்பதாக குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

 பூமிக்கு அடியில் மின் இணைப்பு வசதி, மெட்ரோ ரெயில் வசதி, விளையாட்டு மைதானம் போன்ற எந்த வசதியும் செய்து தராமல் சொத்துவரி பல மடங்கு உயர்த்தி இருப்பது பொதுமக்களை பாதிக்கும் செயலாகும் என்று மனு கொடுத்துள்ளனர்.

சொத்து வரி உயர்த்தப்பட்டு தற்போது வசூலிக்கும் பணி தொடங்கி உள்ளதால் வாடகைக்கு குடியிருப்போர் கவலை அடைந்துள்ளனர். வீட்டு வாடகையை உரிமையாளர்கள் ரூ.500 முதல் ரூ.2000 வரை உயர்த்த தொடங்கி உள்ளனர். இதனால் வாடகை வீடுகளில் இருப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சிறிய வீடுகளுக்கு குறைவான வரி விகிதமும் பெரிய வீடுகளுக்கு அதிக வரி விகித அடிப்படையில் வரி விதிக்கப்பட்டு இருப்பதால் சாதாரண மக்களை பாதிக்காது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.