ஆண்குழந்தை பத்து லட்சம்!அமைச்சர் தொகுதியில் பரபரப்பு!! பெண் மருத்துவர் மீதுவிசாரணை!!

ஜி.கே.சேகரன்,
ஆண் குழந்தையை பத்து லட்ச ரூபாய்க்கு விற்றதாகவும், அதே போல் குழந்தைகள் பல விற்கப்பட்டதாகவும் பெரிய குற்றச்சாட்டு ஒன்று பெண் மருத்துவர் தனலட்சுமியை நோக்கி கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் மீது விசாரணை நடந்துள்ளதாக ஆடீயோ வாயிலாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று உள்ளது. இங்கு மகப்பேறு வசதிகள் உட்பட அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.
இந்த மருத்துவமனையில் உள்ள பெண் மருத்துவர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் பெண் ஊழியர் பரிமளா ஆகியோரை குறிப்பிட்டு ஒரு ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதில் மல்டிபர்பஸ் ஒர்கராக பணியாற்றும் ரகு என்பவர், அவரது குடும்ப தேவைக்காக மேற்படி சுகாதார நிலையத்தின் பெண் ஊழியரான பரிமளாவிடம் கடனுக்கு பணம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த பரிமளா, நீ ஏன் கஷ்டப்படுற, ஆண் குழந்தை ஏதாவது இருந்தால் சொல்லு, பத்து லட்சம் ரூபாய்க்கு அது போகும், உனக்கு ஒரு லட்சம் ரூபாயை டாக்டர் கொடுப்பாங்க. அதே பெண் குழந்தை என்றால் 50 ஆயிரம் கமிஷன் வாங்கித் தருகிறேன் என்று சொன்னாராம்.
அதெல்லாம் வேண்டாம், வெளியில் தெரிந்தால் வேலை போய்விடும் என்று சொல்லி ரகு மறுத்துள்ளார்.
"கடந்த 31.08.2020 ஆம் தேதி காலிசா என்பவரின் மனைவிக்கு இங்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை இவர்கள் ஸ்ரீபன் குமார் என்பவருக்கு விற்றுவிட்டார்கள்".
கர்ப்பமே தரிக்காத பெண்ணுக்கு குழந்தை பிறந்த மாதிரி பெர்த் சர்டிபிகெட் கொடுத்துள்ளார் சுப்பிரமணி. அதை பிங்க் கலர் ரெக்கார்டுல அவர் எழுதி வச்சிட்டாரு. ஆனால் டெலிவரி ரெக்கார்டுல எந்த குறிப்பும் இல்லை.
இதையெல்லாம் யாரோ புகார் எழுதி போட்டுவிட்டார்கள். அதன் பேரில் என்கொயிரி வந்து, இந்த ரெக்கார்டுகளை எடுத்துட்டு போயிருக்காங்க.
அப்படியிருக்க நான் தான் அந்த புகாரை அனுப்பினேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு என்னை அவர்கள் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
நான் கலப்பு திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். இவர்களுக்கு பயந்தே வேலைக்கு போகாமல் லீவு போட்டுவிட்டு இருக்கிறேன் என்று அந்த ஆடியோவில் புலம்பியுள்ளார் ரகு.
இந்த விஷயம் மூடி மறைக்கப்பட இருந்த நிலையில் செய்தியாளர்கள் சிலர் இதை கண்டுபிடித்துவிட்டனர். இது குறித்து இராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப. அவர்களிடம் பேட்டிக் கண்டனர்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, மேல் விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகள் மருத்துவர் மற்றும் ஊழியர்களின் துணையோடு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இது குறித்து குழு அமைத்து விசாரணை செய்து வருகிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தை விற்பனை செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் தனலட்சுமி அருங்குன்றம் சுகாதார நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அப்படி ஏதும் மாறுதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பு:- கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் சொந்த தொகுதியில் இந்த குழந்தை விற்பனை நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.