தூளிகட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லும் கொடுமை!

டி.முகமது இர்பான்,

மலைவாழ் மக்களின் நலனுக்காக பல நூறு கோடிகளை கொட்டி குவித்துவிட்டோம் என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்க? மறு பக்க உண்மை நிலையோ வேறு மாதிரியாக இருக்கிறது.

அதை பறைசாற்றும் வகையில் ஜவ்வாது மலை கிராம வாசிகள் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதாவது திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, ஜவ்வாது மலையில், புதூர் நாடு அருகே விலாங்குப்பம் என்கிற மலைகிராமம் உள்ளாது.

 அடர்ந்த காட்டுக்கு நடுவே எழில் சூழ அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்துமே மறுக்கப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துவிட்டார். அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. அதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதை இல்லை. அப்படியிருக்க  தடிக்கொம்பில் தூளி கட்டி (ஜோலி) அவரை தூக்கிச்சென்றனர்.

 

கரடு முரடான கற்கள் நடுவே அவரை சுமந்துக் சென்று சிகிச்சை கொடுத்துள்ளனர்.  இந்த கரடு முரடு பாதைக்கு மண் கொட்டி ஓரளவுக்கு நடக்க போக வர சரி செய்யலாம் என்று ஏற்கனவே அந்த கிராம மக்கள் முயன்ற போது வனத்துறையினர் பாய்ந்து வந்து அதை தடுத்தத்தோடு, இரவு ஒன்பது மணிவரை அங்கேயே காவல் காத்தனராம்.

  அவர்கள் கடமையை சரியாக செய்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், மாவட்ட நிர்வாகம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த தலைவர், எம்.எல்.ஏ. என்று சொல்வார்களே அவர்கள் எல்லாம் எங்கே என்று அந்த மலைவாழ் மக்கள் அப்பாவியாய் கேட்கிறார்கள். பாவம் தேர்தல் முடிந்துவிட்டதை அவர்கள் மறந்துவிட்டனர் போலும்.