சொல்லாமலேயே சாலையை மூடுவீங்களா? மக்கள் கொதிப்பு!

சொல்லாமலேயே சாலையை மூடுவீங்களா? மக்கள் கொதிப்பு!

க.பாலகுரு,

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்....  கடும் அவதிக்கு உள்ளாகும் பொதுமக்கள்..

   திருவாரூர் மாவட்டத்தில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

   இதனைத் தொடர்ந்து தற்போது நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளை இடித்து  சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் பேருந்து நிலையத்தின் வழியாக திருவாரூர் நகருக்குள் வரும் சாலை முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலைய பகுதியை கடந்தே பனகல் சாலை வழியாக தேரோடும் வீதிகள் மற்றும் நகர் பகுதிக்குள் வர முடியும் என்ற சூழ்நிலை உள்ள நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதி முழுவதும் இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடைத் தெருவுக்கு செல்லவும்.,ரயில் நிலையம் செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

  மேலும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முடியாத அளவில் பழைய பேருந்து நிலையத்தை சுற்றிலும் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதைகள் முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாற்றுப் பாதையில் போதிய போக்குவரத்து வசதி இல்லாததன் காரணமாக பொதுமக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே செல்லக்கூடிய நிலை உள்ளது. மேலும் முறையான அறிவிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள்  வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ளும் சூழல் நிலவி வருகிறது.

  பொதுமக்களுக்கு  இடையூறு இன்றி முறையான அறிவிப்புகளை வெளியிட்டு  வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கொதித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.