அரசு ஊழியர்களின் மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புகள் ஏற்கப்படாது! தலைமைச் செயலாளர் கறார் அறிக்கை!

அரசு ஊழியர்களின் மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புகள் ஏற்கப்படாது! தலைமைச் செயலாளர் கறார் அறிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் வேலை நிறுத்த நாளில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை 15-ம்தேதி காலை 10.15 மணிக்குள் மனித வள மேலாண்மை துறைக்கு தெரிவிக்க வேண்டும்" என தலைமைச் செயலாளர், அனைத்து துறை செயலாளர்களுக்கு அறிக்கை அனுப்பி அனுப்பியுள்ளார்.

 அதே நேரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிடுமாறு பெரிய அறிக்கையின் மூல கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்கு ஆளான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்போது தமிழக அரசுக்கு எதித்ராக குரலெழுப்பி வருகிறார்கள். அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்த போதிலும் அதில் அவர்கள் ஒத்து போகாமல் அரசை மிரட்டி பணிய வைக்க போராட்டம் மூலம் முயற்சித்து வருகிறார்கள்.

  பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை பிப்ரவரி 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  அப்படியிருக்க, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

  அவர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் எழுதியுள்ள அவசர கடிதத்தில் "அனைத்து துறையின் அரசு ஊழியர்கள் விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும். வேலை இல்லை ஊதியம் இல்லை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகளுக்கு அவர்களுக்கு உரிமை இல்லை.

  பகுதி நேர பணியாளர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியத்தில் இருப்பவர்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். நடத்தை விதிகள் 1973-ஐ யாரும் மீறவில்லை என்பதை உறுதி செய்வதோடு பணியில் இல்லாத காரணத்திற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

   சாதாரண விடுப்பு, மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் வேலை நிறுத்த நாளில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஊழியர்களின் வருகை நிலை குறித்த அறிக்கையை 15-ம்தேதி காலை 10.15 மணிக்குள் மனித வள மேலாண்மை துறைக்கு தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

   இது ஒரு பக்கம் இருக்க தமிழக அரசின் நிதி நிலைமை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

 இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  அதில் கூறப்பட்டிருப்பதாவது, "மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழி நடக்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமயத்திலும் அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து அவர்களின் நலன் கருதி பல்வேறு அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

    கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக; 2023 ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

   கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019-ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தக் காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

   ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் தமிழக அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்துக்கு சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது.

   மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 65,075 ஓய்வூதியர்களின் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

   தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்துடனும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும் பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 27,858 பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

  இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறைந்த பட்சம் 50,000 பேர் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணி நியமனம் பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த விவரத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243-னை நடைமுறை படுத்துவது குறித்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

   நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் அரும்பெரும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது.எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.