தமிழ்தாய் வாழ்த்தை ஆளுநர் வெறுக்கிறார்! மரபை மறைக்கிறார்!

உ.சசிகுமார்,
இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பிப்ரவரி 12 ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது.
பின்னர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டதுடன், ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன, அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி.
எனவே ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். "ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும்.
மழை, வெள்ளம் வந்த பிறகும் ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பி.எம்., கேர் நிதியில் உள்ளது. அதிலிருந்து ஒரு 50,000 கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என நான் கூட கேட்க முடியும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் நாதுராம் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்" என்று கூறினார்.
சபாநாயகர் இப்படி சொல்லி முடித்ததும், ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
இதற்குப் பிறகு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவை விதி 17-ஐ தளர்த்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். "2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ், ஆங்கிலத்தில் தவிர்க்கப்பட்ட ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்ட படியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்" என்ற அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்ன?
நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் ஆறு சதவீதத்தையும் கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்தியப் பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கிறது.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீட்டை நிறுத்தியதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர வேண்டும்.
மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதேநேரம், மற்ற மாநிலங்களின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற அணுகுமுறையால், முழு திட்டச்செலவையும் மாநில அரசு செய்ய வேண்டியிருக்கிறது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம்.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
இதுதவிர, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்களும் சாதனைகளும் ஆளுநரின் உரையில் இடம்பெற்றிருந்தன.
தமிழ்த்தாய் வாழ்த்தி மரபு!
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய "நீராரும் கடலுடுத்த" எனத் துவங்கும் பாடல் அரசு விழாக்களின் துவக்கத்தில் பாடப்படும் என 1970 மார்ச் 11ஆம் தேதியன்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி, இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து, பொது நிகழ்ச்சிகளில், அரசு விழாக்களின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.
"ஏதோ எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென ஆளுநர் இதைச் செய்ததைப் போல இருக்கிறது. ஆளுநர் உரையின் சில அம்சங்கள் அவருக்கு ஏற்புடையதாக இல்லையென கூறுகிறார் ஆளுநர். எந்தெந்தப் பகுதிகள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியிருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்படியில்லாமல், பொத்தாம் பொதுவாக பல பகுதிகள் ஏற்புடையதாக இல்லை என்று சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?"
ஆளுநர் இதுபோலச் செய்வது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வைத்தான் பலவீனப்படுத்தும் என்கிற கருத்தே இதன் மூலம் தெரியவருகிறது.