மலேசியா இந்தோனேசியா பாமாயிலுக்கு தடை விதிக்க கோரி சாலை மறியல்!

மலேசியா இந்தோனேசியா பாமாயிலுக்கு தடை விதிக்க கோரி சாலை மறியல்!

 கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்ட விவசாய சங்கம் சார்பில், பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை நெமிலி காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்ற மறியலின் போது, விவசாயிகள் தமிழக அரசின் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும், மலேசியா இந்தோனேசியா பாமாயிலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  தேங்காய், நிலக்கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் தற்கொலைக்கு செல்லும் நிலை உள்ளது. ஆனால் தமிழக அரசு நியாய விலை கடைகளில் மலேசியா இந்தோனேசியா பாமாயிலுக்கு மானியம் கொடுத்து விற்பனை செய்து வருகிறது.

   நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டம் உண்ணாவிரதம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனை ரத்து செய்து தமிழ்நாட்டில் தேங்காய் நிலக்கடலை மற்றும் எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை அப்போது வைக்கப்பட்டது.

  சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நெமிலி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.