தமிழக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி பெயரை உச்சரிக்காத பிரதமர் மோடி!

 தமிழக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி பெயரை உச்சரிக்காத பிரதமர் மோடி!

  ம.பா.கெஜராஜ்,

  தூத்துக்குடியில் நடைபெற்ற அரசுவிழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி அதே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பெயரை உச்சரிக்கவேயில்லை.

  இது குறித்து சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

   இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.  தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.  நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது.

  திமுக அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர். குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை வழங்கியது. மாநில அரசுதான். குலசை ராக்கெட் ஏவுதளம் தொடர்ந்து எங்களால் வலியுறுத்தப்பட்டு, அமைக்கப்பட்டுள்ளது.

   எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை.  முதல்வரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.  அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்.

  வீடு கட்டும் திட்டத்திற்கு  மத்திய அரசு கொடுக்கும் ரூ.70,000-ம் தான் கொடுக்கிறது, மீதி பெரும் தொகையை மாநில அரசு தான் வழங்குகிறது. அவர்கள் தரும் 70,000/த்தை வைத்துக்கொண்டு எந்த வீட்டையும் கட்ட முடியாது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் என்று பெயர் வைத்து, ஸ்டிக்கர் கொண்டிருப்பது பாஜகதான். 

 தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக என்பதை மக்கள் அறிவர் என்று அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது, ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

    விழாவில் தனது உரையை தொடங்கும்போது, விருந்தினர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவேற்றார் பிரதமர் மோடி. அதன்படி, ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் போன்றோர் பெயரை உச்சரித்த பிரதமர் மோடி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பெயரை உச்சரிக்கவில்லை.

   மாநில அமைச்சர் என்று மட்டுமே பிரதமர் மோடி குறிப்பிட்டார். கனிமொழி பெயரையோ, அவரை வரவேற்கவும் இல்லை. பின்பு தனது உரையை தொடர்ந்த பிரதமர் மோடி தமிழக அரசு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்,

 இந்த நிகழ்வில் பேசும்போது, "தமிழக வளர்ச்சியில் தமிழர்களின் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன். தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என்மீது பாசத்தை பொழிந்தார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பல மடங்காக திருப்பி தருவேன்.

 வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை தமிழக அரசு செய்தியாக வெளியிடுவதில்லை. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்" என்று பிரதமர் மோடி பேசினார்.